பிரேத பரிசோதனை முடிந்தாலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் உடலை வாங்குவேன்- ராம்குமார் பெற்றோர்
சென்னை: புழல் சிறையில் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமார் உடலுக்கு இன்று நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. மகனின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்தாலும் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமல் உடலை பெறப்போவதில்லை என்று ராம்குமாரின் பெற்றோர் உறுதியாக கூறியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளரான சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அவரது இறப்பில் மர்மங்கள் நிறைந்திருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இருப்பினும், அவரது உடலை பிரேதப்பரிசோதனை செய்தால் பல தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. இதையடுத்து, ராம் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக அவரது வழக்கறிஞர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படும். நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக படம்பிடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
எனினும் ராம்குமாரின் பெற்றோர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதோடு ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு மாலை 5.40 மணியளவில்தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக் தெரிகிறது. விதிகளின்படி மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை நடைபெறாது என்பதால், பிரேதப் பரிசோதனை செவ்வாய்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராம்குமார் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இன்று பிரேத பரிசோதனை நிகழ்ந்தாலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் மட்டுமே மகனின் உடலை பெற்றுக்கொள்வேன் என்று ராம்குமாரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
ராம்குமாரின் தந்தை
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பதற்காக ராம்குமாரின் தந்தை பரமசிவம், சகோதரி ரோஸி ஆகிய இருவரும் நேற்று கடலூர் வந்தனர். அங்கு அவர்கள் திருமாவளவனை சந்தித்துப் பேசினர். பின்னர் ராம்குமாரின் தந்தை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ராம்குமார் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்துவது தொடர்பாக திருமாவளவனைச் சந்திக்க வந்தேன். எனது மகன் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதிகாரிகள் அவனை கொலை செய்துவிட்டனர். சிபிஐ விசாரணக்கு உத்தரவிட்டால் தான் எனது மகன் உடலை பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.