எம்.எல்.ஏ.க்கள் லிஸ்ட் தர முடியாது... ஆனா பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஆளுநரிடம் ஓபிஎஸ் உறுதி
ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் தர முடியாது; இருப்பினும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என ஆளுநரிடம் திட்டவட்டமாக கூறியுள்ளாராம் ஓபிஎஸ்.
சென்னை: தமக்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை தம்மால் தர முடியாது; அதே நேரத்தில் சட்டசபையை பெரும்பான்மையை நிரூபிப்பேன் என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாராம்.
ஆட்சி அமைக்க போட்டி போடும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது ஓ. பன்னீர்செல்வத்திடம், உங்களுக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை தர முடியுமா? என கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், தற்போதைய நிலையில் 60 எம்.எல்.ஏக்கள் ஆதரவு பட்டியலைத் தர முடியும். இதை பட்டியலாக கொடுத்தால் எங்களுக்கு பின்னடைவு ஏற்படும். ஏனெனில் எடப்பாடி தரப்பு 128 எம்.எல்.ஏக்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளது. அதனால் சட்டசபையில் எங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என கூறியுள்ளார்.
அப்படியானால் எதிர்க்கட்சிகள் உங்களை ஆதரிக்குமா? என ஆளுநர் வித்யாசாகர் கேள்வி எழுப்ப, நிச்சயமாக எதிர்க்கட்சிகள் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும்; நீங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தாருங்கள் என வலியுறுத்தினாராம் ஓபிஎஸ்.
இதையடுத்து மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி சட்டசபையை கூட்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம் என முடிவெடுத்துள்ளாராம் ஆளுநர். இதனால்தான் இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.