விஜயகாந்த்தை "விட மாட்டோம்".. தொடர்ந்து பேசுவோம்.. பொன். ராதா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக மீது கடுப்புடன் இருக்கும் விஜயகாந்த்தை நேற்று பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் அடங்கிய பாஜக குழு போய்ப் பார்த்தது. அப்போது பாஜகவினர் தன்னை மதிப்பதில்லை என்று குமுறித் தள்ளி விட்டாராம் விஜயகாந்த்.
இருந்தாலும் விடாமல் விஜயகாந்த்துடன் பேசப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் சந்திப்பு சாதாரண முறையிலானது. கூட்டணி விஷயங்கள் பற்றி பேசவில்லை.

எங்களை சந்திக்க விரும்பாமல் விஜயகாந்த் தாமதம் செய்யவில்லை. மாறாக, நாங்கள் தான் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தாமதமாக சென்றோம். அவர் வெளியே செல்ல தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவர் எங்களை காக்க வைத்ததாக பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். கூட்டணி பற்றி விஜயகாந்துடன் தொடர்ந்து பேசுவோம். அவர் எங்கள் கூட்டணியில் நீடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மாநிலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தற்போது தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு என்னென்ன தேவை? அதை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றி அரசாங்கத்தோடுதான் பேச முடியும், அரசோடு பேசுவதை கூட்டணி என்று பேச ஆரம்பித்தால் இதைவிட கற்பனையானது வேறு எதுவும் இருக்க முடியாது என்றார் அவர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், நேற்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமான நட்புரீதியான சந்திப்புதான. அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிப்பது சகஜமானது தான்.
ஆனால் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வமான பேச்சு எதுவும் நடத்தவில்லை. சாதாரணமாக எங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் நடந்தது அவ்வளவுதான்.
பிரேமலதா விஜயகாந்த் என்னோடு நெருங்கிய நட்புடன் இருப்பவர். நட்பு ரீதியாக அடிக்கடி அவரை சந்திப்பேன். அவ்வாறு சந்தித்ததை அரசியல் ரீதியிலான சந்திப்பு என்று கூறிவது சரியல்ல என்றார்.












Click it and Unblock the Notifications