வேட்டியை கழட்ட சொன்னால் எப்படிங்க? - ஆர்.பி.உதயகுமார் "அட" பேச்சு!
சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து விலக்கி வைக்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மதுரை: சட்டை, பனியனை கழட்டி வைத்து விட சொன்னார்கள்.. செய்தோம். இப்போ, வேட்டியையும் கழட்டி வைத்து விட்டு வரச் சொன்னால் எப்படி என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நகைச்சுவையாக பேசினார்.
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை இதோ, அதோ என போக்கு காட்டிய நிலையில் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி கொண்டனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் நிபந்தனைகளை விதிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

ஓபிஎஸ் அணியினரோ தாங்கள் விதித்த இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்ற முனைப்பில் உள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நிலவி வந்தது. இதனிடையே திருப்பரங்குன்றத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று மே தின கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், சட்டை பனியனை கழட்டி வைத்துவிட சொன்னார்கள். அதை செய்தோம். பின்னர் வேட்டியை கழட்டி வைத்து விட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தை என்கிறார்கள். அது எப்படி முடியும்.
நீங்களும் வேட்டி சட்டையுடன் வாங்க, நாங்களும் வர்றோம். இருவரும் இணைந்து இரட்டை இலையை மீட்போம். அதை விட்டு விட்டு அவர்களை விலக்கி வைங்க, இவர்களை விலக்கி வைங்க. அவர்களை உள்ளே போடுங்க, இவர்களை உள்ளே போடுங்க என்று கூறுகிறார்கள். அப்படிக் கூற நீ யார்?
நிபந்தனைகளின்றி பேச முன்வந்தால் நாங்கள் தயார் என்றார் அவர். அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டியபோது உண்மையான விசுவாசத்தை ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து கற்றுக் கொண்டோம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது நீ வா போ என்ற ரேஞ்சுக்கு டக்கென இறங்கி விட்டார் என்பதும் முக்கியமானது.












Click it and Unblock the Notifications