தொடக்கத்திலேயே சதம் அடித்த வெயில்... நெல்லை மக்கள் அவதி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தின் ஆரம்பம் முதலே வெயில் வறுக்க தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். நெல்லை மாவட்டத்தில் மார்ச் மாதத்திலேயே கோடையின் அறிகுறி இருந்தது. இருப்பினும் அவ்வப்போது மழை தலை காட்டியதால் குளிர்ச்சி ஏற்பட்டு வந்தது. இந்த மழை பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்தது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நெல்லையில் அனல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
முக்கிய வேலைகள் தவிர பிற தேவைகளுக்கு வெயிலின் தாக்கம் குறைந்த பின்னரே வெளியே செல்கின்றனர். கடும் வெயில் காரணமாக சாலைகளிலும் கானல் நீர் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று நெல்லையில் மட்டும் 101.03 டிகிரி வெப்பம் பதிவானது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க பொதுமக்கள் இளநீர், மோர், குளிர்பானங்கள் அருந்தி வருகின்றனர். இதனால் சாலையோரங்களில் இளநீர், மோர், பதனீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த கோடை வெயிலின் தாக்கம் இரவிலும நீடிக்கிறது.
இரவில் காற்று குறைந்துளளதால் வீடுகளில் புழுக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கோடை காலத்தை எப்படி கழிக்க போகிறோமோ என்ற அச்சம் இப்போதே பொதுமக்கள் மத்தியில் உள்ளது.












Click it and Unblock the Notifications