மீண்டும் மழை.. 30ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யுமாம்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஒரு மழைக்காலம் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்திருப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையிலும் இன்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் தூறல் மழையாகவும் உள்ளது.
மழை நிலவரம் குறித்து வானிலை மையத் தரப்பில் கூறுகையில், தென் மேற்கு வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் அதே நிலையில்தான் உள்ளது.
இதனால் நாளை முதல் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யும். 30ம் தேதி முதல் கன மழை பெய்யும். தரைக் காற்று அதிகம் வீசும். சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் இரவில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கடும் வாடைக் காற்று வீசுடன் குளிரும் நிலவி வந்த நிலையில் தற்போது மழை தூற ஆரம்பித்திருக்கிறது.