எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாரே மனுஷன்... என்ன காரணமாக இருக்கும்??
சென்னை: எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாரே மனுஷன்... என்ன காரணமாக இருக்கும்? என்று அமைச்சர் விஜயபாஸ்கரை பற்றிதான் பேச்சாக இருக்கிறது.
போன வாரம் தமிழகத்தை அதிகமாக உலுக்கிய விவகாரம் குட்கா, அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் விவகாரம்தான். இதனால் தமிழக அரசியல் களமே சூடு தாங்காமல் கொதித்தது. கிட்டத்தட்ட எல்லா கட்சிக்காரர்களுமே விஜயபாஸ்கர் மனமுவந்து ராஜினாமா செய்ய வேண்டும், அல்லது அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ஏக மனதாக சொல்லிவிட்டார்கள்.

உற்று நோக்கிய தமிழகம்
தமிழக வரலாற்றிலேயே நடைபெறாத அளவுக்கு, டிஜிபி வீட்டில் சோதனை கூட நடைபெற்றது. இதற்கெல்லாம் சேர்த்து முதலமைச்சர் என்ன செய்ய போகிறார்? எவ்வித நடவடிக்கை எடுக்க போகிறார்? தம் அரசை காப்பாற்றி கொள்ள அமைச்சரையும், டிஜிபியையும் டிஸ்மிஸ் செய்து விடுவாரோ, இடைத்தேர்தல்கள் வரும் சமயத்தில் ஆட்சிக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என தடாலடி முடிவு எடுக்க போகிறரோ என தமிழகமே அன்றைய தினம் மீடியாவின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி கொண்டிருந்தது.

முதலமைச்சருடன் சந்திப்பு
அதற்கேற்றார்போல், சோதனை நடைபெற்ற அன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட்டார். அந்த ஆலோசனையின்போது டிஜிபி மாற்றப்பட்டு புது டிஜிபி பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்களும் கசிந்தன. ஆனால் நடுராத்திரி டிஜிபி முதலமைச்சரை போய் சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறார். அவர் பார்த்து முடித்தபிறகு பின்னாடியே அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்று பார்த்தார்.

காட்டமான கேள்வி
அப்போது முதலமைச்சரிடம் விஜயபாஸ்கர், "ரெய்டு நடந்தாலே நான் குற்றவாளி கிடையாது. உங்கள் மகன் மற்றும் சம்பந்தி வீட்டிலும் ரெய்டு நடந்தது. நீங்கள் ராஜினாமா செய்து விட்டீர்களா?"என கேள்வி எழுப்பினாராம் விஜயபாஸ்கர், அதோடு, ஓ.பி.எஸ்-க்கு எதிராகவும் வழக்கு இருக்கிறது. அவர் ராஜினாமா செய்துவிட்டாரா. என்னை மட்டும் ஏன் ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறீர்கள்? என காட்டமாக கேட்டதாக கூறப்படுகிறது.

ஜெயக்குமார் பதிலடி
உண்மையிலேயே இவர்கள் இருவரும் எதற்காக முதலமைச்சரை சந்திக்க போனார்கள், என்ன பேசிவிட்டு வந்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை. இருவரும் இந்த நிமிடம் வரை பதவியில்தான் நீடித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும், "சிபிஐ சோதனைதானே நடக்கிறது, சோதனை நடைபெறுவதாலேயே அவர்கள் குற்றவாளிகள் இல்லை, நீதிமன்றம்தான் குற்றவாளிகளா இல்லையா என்பதை முடிவுசெய்யும். தீர்ப்பு வரும்வரை எல்லாருமே நிரபராதிகள்" என்றார்.

வழக்கமான பங்கேற்பு
இப்போது குட்கா விவகாரத்தில் சூடாக்கிவிட்ட அரசியல் களம் மெல்ல மெல்ல ஆற தொடங்கிவிட்டது. அதுவும் இல்லாமல் விஜயபாஸ்கர் இப்படி ஒரு விஷயமே தன் வீட்டில் நடக்காத மாதிரி வழக்கமான செயல்படுகளில் ஈடுபட தொடங்கிவிட்டார். சோதனை நடைபெற்ற மறுநாளே தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

நோ டென்ஷன்
அதேபோல, 7 தமிழர் தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் உள்பட அனைத்திலுமே கலந்து கொண்டு வருகிறார். இந்த நிகழ்வுகளில் எல்லாம் கூட்டத்தில் வந்திருப்பவர்களிடம் சகஜமாகவே பேசுகிறார். முகத்தில் ஒரு டென்ஷனும் அவருக்கு இல்லையே. எத்தனை நடந்தாலும் சிரிச்ச மாதிரியே இருக்காரே.. இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும் என அனைவருமே மண்டையை பிய்த்து கொண்டு உள்ளனர்!!











Click it and Unblock the Notifications