கூவத்தூரில் எடப்பாடி அளித்த வாக்குறுதிகள் என்னென்ன... பட்டியலிட்டு தோப்பு வெங்கடாச்சலம் பகீர்
கூவத்தூரில் இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் குற்றம்சாட்டியுள்ளார்.
பெருந்துறை: கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது முதல்வர் பழனிச்சாமி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று தோப்பு வெங்கடாச்சலம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுபேற்கும் நிலை உருவானது.
அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் ஓபிஎஸ் அணிக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக சசிகலா தரப்பு அவர்கள் அனைவரையும் கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் வைத்திருந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என்று தோப்பு வெங்கடாச்சலாம் குற்றம்சாட்டியுள்ளார். திங்கள்கிழமை பெருந்துறையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எடப்பாடி கொடுத்த வாக்குறுதிகள்
கூவத்தூர் முகாமில் நாங்கள் இருந்த போது சசிகலாவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எங்களை சந்தித்தார்கள். அப்போது சில வாக்குறுதிகள் எங்களுக்கு அளித்தார்கள்.
எடப்பாடியின் மகிழ்ச்சி
கூவத்தூரில் முதல்வர் பழனிச்சாமி என்னிடம் பேசினார். அப்போது, நீங்கள் எங்களோடு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னார்.
வைத்த 3 கோரிக்கைகள்
அன்று நான் பழனிச்சாமியிடம் 3 கோரிக்கைகளை வைத்தேன். ஒன்று, பெருந்துறை தொகுதியில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். 2வது பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். 3வது பெருந்துறையில் சில இடங்களில் பாலம் அமைக்க வேண்டும் என 3 கோரிக்கைகளை வைத்தேன்.
பதவி ஆசை காட்டி…
இதற்கு எடப்பாடி பழனிசாமி, இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறும் என்று கூறினார். நான் எந்த பதவியையும் கேட்காத போதே மாவட்டச் செயலாளர் பதவி தருவதாகக் கூறினார்.
நிறைவேற்றாத வாக்குறுதி
அன்று கூவத்தூர் முகாமில் எனக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் முதல்வர் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.