அட்சய திரிதியை: தானம் செய்யுங்கள்... அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும்
சென்னை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அட்சய திரிதியை நாளில் அன்னதானம் செய்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். அட்சய திரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. அதுவும் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும் என்கின்றனர் முன்னோர்கள்.

அட்சய திரிதியை சிறப்பு
அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான். வியாச மஹரிஷி சொல்லச் சொல்ல பிள்ளையார் மஹாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்த நாளில்தான். குபேரன், மஹாலட்சுமியைத் துதித்து என்றும் வற்றாத செல்வம் நிறைந்த சங்க நிதியையும், பதும நிதியையும் பெற்றதும் அட்சய திருதியை நாளில்தான். புண்ணிய நதியான கங்கை நதி வானத்திலிருந்து பாரத மண்ணுக்கு வந்ததும் இந்த நாளில்தான்.
தானம் செய்யுங்கள்
வட மாநிலங்களில் அட்சயதிருதியை நாளை அலா தீஜ் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று புதிதாக தொழில் ஆரம்பிக்கவும், உழவுத் தொழிலைத் தொடங்கவும், முன்னோர்கள் பித்ருக்கள் காரியங்கள் செய்யவும் ஏற்ற நாளாக இந்த நாளைக் கருதுகிறார்கள். எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அட்ச திருதியை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
திருமகளின் அருள் அட்சயமாக நம் மனைகளில் நிறைந்திருக்க அட்சய திருதியை அன்று லட்சுமி வழிபாடு செய்தும் தயிர் சாதம், புதிய வஸ்திரம் முதலியவை தானம் அளித்தும் தெய்வங்களை வழிபடுவதன் மூலம் அளவற்ற செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
27 நட்சத்திரகாரர்கள் தானம் அளிக்கவேண்டிய பொருட்கள்
அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கார்த்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
மிருகசீரிடம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.
புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்.
மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.
அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.
கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்.
மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.
வணங்கவேண்டிய தெய்வங்கள்
அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்
பரணி, பூரம், பூராடம்: ரங்கநாதர்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்: சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்
புனர்பூசம், விசாகம், பூராட்டாதி: ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்
உத்திரம், உத்திராடம், கார்த்திகை: முருகன்












Click it and Unblock the Notifications