டப்பு டப்புன்னு சத்தம்.. அர்ச்சகரை குளம் அப்டியே இழுத்துருச்சு! நேரில் பார்த்த பெண் திடுக் தகவல்
செங்கல்பட்டு: நங்கநல்லூர் அருகே கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது இளம் வயது அர்ச்சகர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின்போது தான் கண்ட காட்சியை விவரித்து இருக்கிறார் பெண் பக்தர்.
செங்கல்பட்டு மாவட்டம் நங்கநல்லூரை அடுத்த மூவரசம்பட்டு கிராமத்தில் அமைந்து உள்ளது தர்மலிங்கேசுவரர் கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த 10 நாட்களாக கோயிலில் திருவிழா நடத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு இருந்த நிலையில், சுமார் 25 அர்ச்சகர்கள் கோயில் தெப்பக்குளத்தின் நீரில் இறங்கி இருக்கின்றனர். கரையை ஒட்டிய பகுதியில் அர்ச்சகர்கள் சடங்குகளை செய்துகொண்டு இருந்தபோது 3 அர்ச்சகர்கள் மட்டும் தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். இதனை கண்ட மேலும் 2 அர்ச்சகர்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர்.

5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு
அப்போது அவர்களும் குளத்தில் மூழ்கிய நிலையில், 5 பேருடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கிய உயிரிழந்த அர்ச்சகர்கள் சூர்யா, பானேஷ், ராகவன், யோகேஸ்வரன் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்ற அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
போலீசார் விளக்கம்
இதுகுறித்து அங்கிருந்த போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், "மூழ்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். கோயிலில் 10 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. போலீசார் 10 நாட்களாக உரிய பாதுகாப்பை அளித்து வருகிறோம். எங்களுக்கும் வருத்தமாகவே உள்ளது. போலீஸ் பாதுகாப்புடன்தான் காலை தீர்த்தவாரி எடுத்தனர். 2வது முறையாக தீர்த்தவாரி எடுத்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு 5 பேரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. அர்ச்சகர்கள் மூழ்கிய குளம் சுமார் 40 அடி ஆழம் கொண்டது என்று கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்தை தூர்வாரிய பிறகு அதன் ஆழம் அதிகரித்து உள்ளது. அதேபோல் கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்து வந்து இருக்கிறது. குளத்தில் இறங்கிய அர்ச்சகர்கள் பலருக்கு நீச்சல் முறையாக தெரியாது என்று அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

நேரில் பார்த்த பெண்
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பெண் பக்தர் மங்களம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளா. அவர் தெரிவிக்கையில், "நாங்கள் சாமியைதான் பார்த்துக்கொண்டு இருந்தோம். ஒருவர் மட்டும் தடுமாறினார். அப்போது அவரை உள்ளே இழுத்துவிட்டது. டப்பு டப்பு என்று சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மக்கள் யாருமே தெப்பக்குளத்தில் இல்லை. அர்ச்சகர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அதாவது சாமியை தூக்கிக்கொண்டு மூழ்குபவர்களே குளத்தில் இறங்கினார்கள். முதல் முறை மூழ்கினார்கள். 2 வது முறையும் மூழ்கினார்கள். 3 வது முறை மூழ்கியபோது ஒருவரை அப்படியே நீர் இழுத்துவிட்டது. எல்லோருக்கும் அப்போது அதிர்ச்சியாகவே இருந்தது." என்றார்.












Click it and Unblock the Notifications