உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சியா?... நிர்மலா தேவி வழக்கில் நடப்பது என்ன??
சென்னை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவி கொடுத்துள்ள வாக்குமூலம் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவிப் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி. இவர் கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி இவரிடம் படிக்கும் மாணவிகளை மதுரை பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக ஆடியோ வெளியானது.
இதையடுத்து நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஆய்வு மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வாக்குமூலம்
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார் ஒரு விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தது உண்மைதான் என்று நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீளும் பட்டியல்
முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் அவ்வாறு பேசியுள்ளதாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸார் ஒருவர் கூறுகையில் நிர்மலாதேவியின் செல்போன் எண்களை சோதனை செய்த போது அருப்புக்கோட்டை நகராட்சியின் ஒப்பந்தக்காரர்கள் தொடங்கி, உயர் கல்வித்துறை உயரதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்கள், பா.ஜ.கவினர் எனப் பட்டியல் நீட்டு கொண்டே செல்வதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

உண்மையை கூறவில்லை
ஆனால் தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் நிர்மலா தேவி வெறுமனே முருகன், கருப்பசாமியின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இதனால் உண்மைாயன குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்று நிர்மலா தேவிக்கு பெரிய இடத்திலிருந்து மூளை சலவை செய்யப்பட்டு அவர்கள் இருவரது பெயரை மட்டும் கூறுமாறு உத்தரவு ஏதும் வந்திருக்கலாம். இல்லாவிட்டால் தனது உயிருக்கு பயந்து கொண்டு முக்கிய பிரமுகர்களை கூறாமல் முருகன் மற்றும் கருப்பசாமிக்காகதான் எல்லாவற்றையும் செய்தேன் என்று அவர்களை முதல் குற்றவாளியாக்கிவிட்டு குறைந்தபட்ச தண்டனையுடன் இவர் தப்ப திட்டமிட்டிருக்கலாம்.

மாணவிகள் சப்ளை
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் நிர்மலா தேவி தனக்கு ஆதாயம் இல்லாமல் செய்திருக்கமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கையில் ஏற்கெனவே உதவி பேராசிரியர் நிலையில் இருந்து பேராசிரியர் நிலைக்கு சென்ற நிர்மலாவுக்கு மேலும் பதவி உயர்வு கிடைக்க ஆராய்ச்சி மாணவருக்கும் தன்னை விட நிலையில் குறைந்துள்ள உதவி பேராசிரியராக உள்ளவருக்கும் பெண்களை சப்ளை செய்ய வேண்டிய அவசியம் இல்லையே. பல்கலைக்கழக உயரதிகாரிகள், ஆளுநர் அலுவலகம், தமிழக அரசு அதிகாரிகள் என உயர் பதவியிலிருக்கும் நபர்களுக்கு இத்தனை காலமாக இவர் மாணவிகளை சப்ளை செய்திருக்க கூடும் என்றே பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சுஜா பேட்டி
தற்போது மாட்டி கொண்டவுடன் அவர்களது பெயர்களை வெளியிட்டால் பின்விளைவுகளை அறியாதவரா என்ன இந்த நிர்மலா தேவி. உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா அவர் கைது செய்யப்பட்ட போது கூறுகையில் நிர்மலாதேவி விவகாரத்தில் எனது கணவர் முருகன் மற்றும் கருப்பசாமியை பலிகடாவாக்கி வழக்கை முடிக்க பார்க்கின்றனர். நிர்மலாதேவிக்கும், எனது கணவருக்கும் எந்த பழக்கமும் இல்லை.

3 முறை சந்திப்பு
கடந்த 4 மாதமாகத்தான் அவரை தெரியும். புத்தாக்க பயிற்சிக்கு வந்த நிர்மலா தேவிக்கு அறை ஒதுக்கி கொடுப்பதில்தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 முறை தான் அவரை எனது கணவர் முருகன் சந்தித்துள்ளார் என்று கூறியுள்ளார். எனவே ஒன்று நிர்மலா தேவி மிரட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த இருவரையும் மாட்டி விட்டு தப்பித்தால் வேலையும் , பணமும் தருவதாக யாரேனும் முக்கிய தலைகள் மூளை சலவை செய்திருக்கலாம். எனினும் இந்த விவகாரத்திலும் உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்படாமல் அப்பாவிகள் பலிகடாவாக்கப்படுவார்களோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications