ஒப்புக்காக கூட மத்திய அரசைக் கண்டிக்காத தமிழக பாஜக.. என்ன கட்சி இது?
சென்னை: தமிழக விவசாயிகளையும், தமிழக அரசையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஜஸ்ட் லைக் தட் தூக்கி போட்டு விட்டது மத்திய பாஜக அரசு. ஆனால் ஒப்புக்காக கூட மத்திய அரசை கண்டிக்கவில்லை தமிழக பாஜக. விவசாயிகள் கொந்தளித்துப் போயுள்ளது குறித்து கிஞ்சித்தும் அவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
காவிரி பாசனப் பகுதியில் நமக்கெல்லாம் எங்கே ஓட்டுப் போடப் போகிறார்கள் என்ற அலட்சியமா அல்லது இந்த விவசாயிகள் போராட்டம் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணமா என்று தெரியவில்லை.
தமிழக பாஜக தலைவரும் சரி, மூத்த தலைவர் இல. கணேசனும் சரி, மத்திய அரசின் முடிவு தவறு என்று ஆணித்தரமாக சொல்லவில்லை. கர்நாடக பாஜகவினர் தங்களது மாநில நலனுக்காக குரல் கொடுத்ததில் 1 சதவீதம் கூட தமிழக பாஜகவினர் கொடுக்கவில்லை, போராடவில்லை என்பதே உண்மை.
இன்னும் பச்சையாக சொல்வதானால் வாய் மூடி பேசாமல் இருந்து கர்நாடகத்திற்கு "வெளியிலிருந்து ஆதரவு" கொடுத்துள்ளது தமிழக பாஜக என்றுதான் கூற வேண்டும்.
பச்சைத் துரோகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதலில் சம்மதம் தெரிவித்தது மத்திய பாஜக அரசு. ஆனால் இரு மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு என்ன நடந்ததோ ஏது நடந்ததோ.. முடியாது, அப்படி உத்தரவிட உங்களுக்கு ரைட்ஸ் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டையே அதிர வைத்து விட்டது.
தமிழகம் கொந்தளிப்பு
மத்திய அரசு இப்படி பட்டவர்த்தனமாக கர்நாடகத்திற்கு ஆதரவாக மாறிய செயலை சுப்ரீம் கோர்ட்டே எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படி ஏன் மாறுகிறீர்கள் என்று மட்டும்தான் சுப்ரீ்ம் கோர்ட்டால் கேட்க முடிந்ததே தவிர அதற்கு மேல் போக அது தயாராக இல்லை. தமிழகத்தில் விவசாயிகள் கொதித்துப் போயுள்ளனர்.
பேசிச் சொல்றோம்
இதுகுறித்து கருத்துக் கூறிய பாஜக தலைவர்கள் இதுகுறித்து மத்தியஅரசிடம் பேசுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்கிறோம் என்று சுரத்தே இல்லாமல், ஒரு கவலை, அக்கறை இல்லாமல் பேசினார்களே தவிர மத்திய அரசுக்கு அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இது தவறு என்று கூடவா சொல்லக் கூடாது!
மத்திய அரசின் முடிவு தவறு. தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு இது நலன் பயக்காது, கர்நாடகத்திற்கே சாதகமாக முடியும் என்று கூடவா இந்த பாஜக தலைவர்களால் சொல்லமுடியாது.. தமிழக மக்களுக்காக,அந்த அப்பாவி விவசாயிகளுக்காக இதைக் கூடவா சொல்லமுடியவில்லை இந்த பாஜகவினரால்.
எங்கே போனார் எச் ராஜா
எதற்கெடுத்தாலும் வியாக்கியானம் பேசும் தலைவர்கள் குறிப்பாக எச் ராஜா போன்றோர் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசவில்லை. ஏன் போராட்டத்தில் குதிக்கவில்லை. மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை. நீங்கள் செய்தது தவறு என்று அடித்துக் கூறவில்லை என்று மக்கள் குமுறுகிறார்கள்.
மக்களைப் பற்றி என்ன கவலை
மொத்தத்தில் காவிரி விவகாரத்தில் பாஜக மக்களிடம் அம்பலப்பட்டுப் போய் விட்டது. உண்மையில் கர்நாடக பாஜகவை எவ்வளவோ பாராட்டலாம். அதே போல கர்நாடக காங்கிரஸையும் பாராட்டலாம். தங்களது மக்களுக்கு எந்த லெவலுக்கும் போகிறார்கள். ஆனால் தமிழக பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி தங்களது சுய லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்களே தவிர.. மக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தது மக்களின் தவறுதான்.