கனிமொழி ஆதரவும் இல்லை.. தொண்டர்கள் ஆதரவும் இல்லை.. திடீர் என்று யூ-டர்ன் போட்ட அழகிரி!
திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

மதுரை: திடீர் என்று ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்று அழகிரி பேட்டியளித்துள்ளார். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக திமுக தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்.
திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பேட்டியளித்துள்ளார். கட்சியில் நான் சேர தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் யார் என்று சொல்லமுடியாது. கட்சியை காப்பாற்றத்தான் இதை செய்கிறேன் என்றுள்ளார்.
அழகிரி மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார்.

பெரிய அளவில் எதிர்பார்த்தார்
அழகிரி, திமுக கட்சியில் கிளர்ச்சி செய்தால் தொண்டர்கள் தன் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஸ்டாலினால் நீக்கப்பட்டவர்கள், தன் பக்கம் வருவார்கள் என்று நினைத்தார். முக்கியமாக இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் தன்னால் வெற்றிபெற்றவர்கள் தனக்கு உதவியாக இருப்பார்கள் என்றே அழகிரி கணித்தார்.

ஏமாற்றம்
ஆனால், அழகிரி நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அவர் இன்றோடு ஏழாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். ஆனால் தினமும் 5 முதல் 6 பேர் மட்டுமே அழகிரியை சந்திக்க வருகிறார்கள். நான்கு வருடத்திற்கு முன் அவருக்கு நெருக்கமாக இருந்த சில நபர்கள் கூட, அழகிரியை சந்திக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. இது அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்ததாக பேசிக்கொள்கிறார்கள். மெரினாவில் 1 லட்சம் பேரை கூட்டலாம் என்று நினைத்தவருக்கு இது அதிர்ச்சி அளித்தது.

ஸ்டாலின் பக்கம் கனிமொழி
அழகிரி கொஞ்சமும் எதிர்பார்க்காதது கனிமொழியின் நிலைபாடுதான். ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு கனிமொழி ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல் பொருளாளர் பதவிக்கு எதிராகவும் பேசவில்லை. மிக முக்கியமாக, முன்னை விட ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான ஆளாக கனிமொழி மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கட்சியில் கிளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி இப்படி செய்வார் என்று அழகிரி நினைக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு எதிர்ப்பே இல்லை
இந்த நிலையில்தான் ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கட்சியில் தலைவரானார். யாரும் அவருக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. ஏன் திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு எதிராக குரல் கூட கொடுக்கவில்லை. பொதுக்குழுவில் தன்னை பற்றி எதாவது பேசுவார்கள் என்று நினைத்த அழகிரிக்கு இதுவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

கட்சியில் சேர்த்தால் மட்டும் போதும்
இதை எல்லாம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்த அழகிரி, கட்சியில் தனக்கு முன்னைப்போல செல்வாக்கு இல்லை என்று உணர்ந்துள்ளதாக மதுரை நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாகவே, திமுகவின் தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என்று தற்போது அழகிரி பேட்டி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அழகிரியின் உண்மையான பலம் என்னவென்று, வரும் 5ம் தேதி தெரிய வரும்.












Click it and Unblock the Notifications