விஜயகாந்த்துக்கு எதிராக "சப்ஜாடா" பேசிட்டாங்க.. அடுத்து என்னெல்லாம் பண்ண முடியும் இவங்களால?
சென்னை: எந்தத் தலைவரால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டார்களோ அந்தத் தலைவருக்கே கெடு விதித்து தமிழக மக்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ள வி.சி.சந்திரகுமார் அன் கோவினர் அடுத்து என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிகவுக்கு எதிராக குரல் கொடுத்து கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் வி.சி.சந்திரகுமாரும், அவரது ஆதரவாளர்களும். இவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சில விஷயங்கள் உள்ளன.
1. பொதுக் குழுவைக் கூட்டி விஜயகாந்த்தை கட்சியை விட்டு நீக்கலாம்
இதைச் செய்ய இவர்களுக்கு பொதுக்குழுவில் போதிய ஆதரவு இருக்க வேண்டும். ஆனால் இவர்களைத் தவிர வேறு யாரும் ஆதரவாக இருப்பது போலத் தெரியவில்லை
2. கட்சி சின்னத்துக்கு உரிமை கோரலாம்
பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டி விஜயகாந்த் உள்ளிட்டோரை நீக்கி விட்டு நாங்கதான் தேமுதிக என்று தீர்மானம் போட்டு தேர்தல் ஆணையத்தை அணுகி கட்சி சின்னத்துக்கு உரிமை கோரலாம்.
3. கட்சி சின்னம் முடங்கலாம்
அவர்கள் அப்படி உரிமை கோரினால் தேர்தல் ஆணையம் தேமுதிகவின் தற்போதைய முரசு சின்னத்தை நிறுத்தி வைத்து விட்டு இவர்களின் பஞ்சாயத்தை தேர்தலுக்குப் பிறகு தீர்க்கும். எனவே வரும் தேர்தலில் தேமுதிகவுககு முரசு சின்னம் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்புகளையும் கூட இவர்கள் நினைத்தால் உருவாக்க முடியும்.
4. திமுகவுடன் சேரலாம்
இது எதுவுமே வேண்டாம்ய்யா.. வெயில் வேற ஓவரா இருக்கு, ரிஸ்க்கே வேணாம். பேசாமல் திமுகவில் போய்ச் சேர்ந்து விடலாம் என்று முடிவெடுத்து இவர்களாகவே போய் திமுகவில் சேர முயற்சிக்கலாம். திமுகவும், பாவ புண்ணியம் பார்த்து இவர்களை கட்சியில் இணைக்க முன்வரலாம்.
5. தனிக் கட்சி ஆரம்பிக்கலாம்
இதுவும் வேண்டாம். நாம் தனிக் கட்சி ஆரம்பிப்போம் என்று முடிவு தனிக் கட்சி கண்டு அதைக் கொண்டு போய் திமுக கூட்டணியில் இணைக்கவும் வாய்ப்புண்டு.
இப்படி எது வேண்டுமானாலும் இன்னும் சில மணி நேரங்களில் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.