Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்ரி கைதுடன் முடிந்து போனதா தற்கொலை வழக்கு?: மற்ற அதிமுகவினர் கைது எப்போது??

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிமன்றங்கள் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கின்றன. முதல்வர்களும், முன்னாள் அமைச்சர்களும், பிரதமர்களும் கூட இப்போதைக்கு நீதிமன்ற படியேறுவது வாடிக்கையாகி விட்டது.

சில மாதங்கள் வரை சுழல் விளக்கு சுழல வலம் வந்து அமைச்சராக கோலோச்சிய ஒருவரே தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றவாளியாக வந்து நிற்பார் என்பதை யாரும் இத்தனை சீக்கிரம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நேர்மையான அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணம் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தலைமை பொறியாளர் செந்திலும் மட்டுமேதான் காரணமா என்பதுதான் இப்போது அனைவரின் முன் எழும் கேள்வியாகும். முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணமாக கருதப்படும் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலரையும் கைது செய்யவேண்டும் என்பதே தற்போது அரசியல் கட்சியினரின் வலியுறுத்தலாகும்.

தமிழக அரசியலில் கடந்த ஒன்றரை மாதங்களாவே மையம் கொண்டிருந்தது முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கு. இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று போராட்டங்கள் வெடித்ததை அடுத்து அமைச்சராக இருந்த ஒருவரை பதவி நீக்கம் செய்து பின்னர் கைது செய்துள்ளது ஆளும் கட்சி. தமிழக அரசியல் வரலாற்றில் ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை ஆளும் கட்சியே கைது செய்து சிறையில் அடைத்திருப்பது இதுதான் முதன்முறை.

நெல்லையில் தமிழ்நாடு வேளாண் பொறியியல்துறையில் உதவி செயற்பொறியாளராக இருந்த முத்துக்குமாரசாமி, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகே தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் காரணகர்த்தாவாக கருதப்படும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், தலைமைப் பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டதை அடுத்து முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வழக்கு இது எனவேதான் எந்தவித தலையீடும் இன்றி சுதந்திரமாக செயல்பட்டு கைது செய்திருக்கிறோம் என்கின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

 நடந்தது என்ன?

நடந்தது என்ன?

முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சில நாட்களிலேயே அக்ரியின் உதவியாளர் பூவையாவை அழைத்து விசாரித்த போலீசார், ஏப்ரல் 4ஆம் தேதி கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டினர்.

 நெருங்கி… நெருக்கி…

நெருங்கி… நெருக்கி…

அடுத்ததாக தலைமைப் பொறியாளர் செந்திலுக்கு பொறி வைக்கப்பட்டது. அவர் சிக்கியதும்... அடுத்த கட்டமாக திருவண்ணாமலையில் குலதெய்வம் கோவிலில் இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அட்டாக் செய்தனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

 600 கேள்விகள்

600 கேள்விகள்

சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அழைத்துச் செல்லப்பட்ட அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் ஐ.ஜி மகேஷ் அகர்வால், எஸ்.பி. அன்பு ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். சுமார் 600 கேள்விகள் வரை கேட்கப்பட்டும் எல்லா கேள்விகளுக்கும் தெரியாது என்பதுதான் பதிலாக இருந்துள்ளது.

எனக்கும் இந்த வழக்கிற்கும் துளியளவும் சம்பந்தமில்லை. எனக்கு கீழே உள்ளவங்க செஞ்சதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்று சொல்லி கண்ணீர் வடித்தும் விடாத சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்களை எடுத்துப் போட்ட பின்னரே வழிக்கு வந்தாராம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

 அக்ரி சரிந்த கதை

அக்ரி சரிந்த கதை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் கிராமம்தான் `அக்ரி' கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊர். அப்பா சுந்தரேச உடையார் தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி ஆரம்பித்தபோது அ.தி.மு.க-வில் ஐக்கியமானவர். எம்.ஜி.ஆர் அவருக்கு ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்ததுடன், எம்.எல்.ஏ சீட்டும் கொடுத்தார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை.

 பி.எஸ்.சி அக்ரி படிப்பு

பி.எஸ்.சி அக்ரி படிப்பு

1978 முதல் 1982-ம் ஆண்டு வரை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (அக்ரி) முடித்துவிட்டு, 1983-ம் ஆண்டு வேளாண்மைத் துறையில் வேளாண்மை அலுவலராக வேலையில் சேர்ந்தார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பல பிரிவுகளில் 88-ம் ஆண்டு வரை வேலை பார்த்தார். கடைசியாக புதுப்பாளையத்தில் எண்ணெய் வித்துப் பிரிவில் வேலை பார்க்கும்போது, கடலை விதை கொள்முதலில் ஊழல் எனப் பிரச்னைகள் கிளம்பவும் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு அரசியலுக்கு வந்தார்.

 தோல்விகளும், தொடர் வெற்றியும்

தோல்விகளும், தொடர் வெற்றியும்

அரசியலில் நுழைந்த அடுத்த ஆண்டே அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ஜெ. அணி சார்பில் சேவல் சின்னத்தில் போளூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அடுத்து 91-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு முதலில் கவுன்சிலர் ஆனார். பின்னர் கலசப்பாக்கம் யூனியன் சேர்மனாக இருந்தார். 2006 ஆம் ஆண்டு கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார்.

 பதவி பறிப்பும் கைதும்

பதவி பறிப்பும் கைதும்

2011ஆம் ஆண்டு தேர்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலமாக அமைச்சரானார். உணவுத் துறை அமைச்சர், கல்வித் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர் பதவிகளில் 8 மாத காலம் இருந்தவரின் பதவி பிடுங்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் எம்.எல்.ஏ-வாக மட்டும் இருந்தவருக்கு, மீண்டும் அமைச்சர் பதவி தரப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சராக்கப்பட்டார். அதுவும் சில மாதங்களிலேயே போய்விட்டது என்பதுதான் சோகம்.

 அடுத்தது யார்? யார்?

அடுத்தது யார்? யார்?

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கைதுடன் இந்த வழக்கு முடிந்துவிடப் போவதில்லை. அடுத்தது சிக்கப்போவது யார் என்பதுதான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேள்வி. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ஜெ.பேரவை நெல்லை மாவட்டத் தலைவர் சுதா பரமசிவன்,சுதா பரமசிவனின் உதவியாளர் கோவில்பட்டி கண்ணன், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட அக்ரோ சேர்மன் மகபூப் ஜான், மாநகராட்சி பாளை மண்டலத்தலைவர் எம்.சி. ராஜன், அக்ரியின் முன்னாள் உதவியாளர் பூவையா, அதிமுக எம்.பி. மா. செ முத்துக்கருப்பன், எம்.பியின் மகன் பாசறை மாவட்ட தலைவர் ஹரிஹர சிவசங்கர், அதிமுக மாவட்ட விவசாய அணி பொருளாளர் முருகேசன் ( இவர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சம்பந்திக்கு சம்பந்தியாம்) நெல்லை வேளாண் அலுவலர் பெண் ஆகிய பத்துபேர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் கைது செய்யப்படுவது எப்போது என்பதுதான் இன்றைய கேள்வி.

 பெண் உதவியாளர் டார்ச்சர்

பெண் உதவியாளர் டார்ச்சர்

நெல்லை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உள்ள பெண் அலுவலர் ஒருவர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவர் மூலமாக அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முத்துக்குமாரசாமியின் நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 7 டிரைவர்கள் நியமனத்தை ஒரு மாதமாக ஆர்டர் போட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட அந்த பெண் அலுவலரும் காரணம் என்கின்றனர். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு

 போலீஸ் விசாரணை கிடையாது

போலீஸ் விசாரணை கிடையாது

இதனிடையே, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும், அவரை போலீஸ் காவலில் விசாரிப்பது தொடர்பாக எந்த மனுவும் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவர்கள் இருவரிடமும் ஏற்கெனவே விசாரணையின்போது வாக்குமூலம் பெறப்பட்டுவிட்டதால், தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் இல்லை என்று சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த வழக்கில் தலைமை பொறியாளர் செந்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. காரணம் இனி என்ன நடக்குமே நடக்கட்டும் என்ற மனநிலைக்கு போயிருக்கிறாராம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+