கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்.. காவேரி அறிக்கை வெளியானது.. பெரும் சோகத்தில் திமுகவினர்!
அடுத்த அறிக்கை இன்று பிற்பகல் வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்திகள் திமுகவினரை அதிர வைத்துள்ளது. பெரும் சோகத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.
நேற்று மதியம் முதல் கருணாநிதிக்கு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாக கூறி 24 மணி நேரமும் மருத்துவர்கள் குறித்துள்ளனர். இது சம்பந்தமாக 6-வது முறையாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைதான் அனைவரையுமே நிலைகுலைய வைத்துவிட்டது. முதல் முறையாக கவலைக்கிடமான வார்த்தைகளை அந்த அறிக்கை தாங்கி வந்ததே அதற்குக் காரணம்.
இரவு முழுதும் நீடிப்பு
அனைவருக்குமே மனக் கலக்கத்தை கொடுத்துவிட்டது. தமிழகத்தை பதற்றத்தில் தூக்கி உட்கார வைத்தது. அதனால் மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் முதல் திமுக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் என சகலமும் குவிந்துவிட்டார்கள். அதன் விளைவு போக்குவரத்து திசை திருப்பப்பட்டு.. போலீசாரும் குவிக்கப்பட்டு.. இரவு முழுவதும் இந்த பணி நீடித்தது.
பதட்டத்தை குறைக்க முடிவு
இதனிடையே நேற்றிரவு 10 மணி அளவில் கருணாநிதி உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியாகும் என்றும், அவ்வாறு வெளிவராவிட்டால் இன்று காலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் ஒரு தகவல் பரவியது. கருணாநிதிக்கு கொடுக்கப்படும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டுவிட்டால், ஓரளவு முன்னேற்றம் அடைய வாய்ப்பு ஏற்பட்டுவிடும், அதனை தொண்டர்களிடம் சொல்லி அவர்களின் பதட்டத்தை குறைக்கலாம் என மருத்துவமனை வட்டாரம் முடிவு செய்திருந்தது.
24 மணி நேரம் முடியட்டும்
ஆனால் அறிக்கை ஏதும் இரவு 10 மணிக்கோ, இன்று காலை 6 மணிக்கோ வரவில்லை. காரணம், நேற்றே மருத்துவர்கள் 24 மணி நேரம் குறித்து வைத்துள்ளார்கள். இந்த 24 மணி முடிந்த பிறகுதான் அவரது உடல்நலம் குறித்து சொல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
பெரும் சோகம்
இந்த நிலையில்தான் இன்று மாலை காவேரி மருத்துவமனையின் 7வது அறிக்கை வெளியானது. அது திமுகவினரை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது அவர்களை வேதனையில் தள்ளியுள்ளது.