துப்பாக்கிப் போலீஸ் பாதுகாப்புடன்... ராம்குமாருடன் ஆம்புலன்ஸ் சென்னை புறப்பட்டது
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரை சென்னைக்குக் கொண்டு செல்ல நெல்லை கோர்ட் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ராம்குமாரை அழைத்துக் கொண்டு போலீஸ் குழு சென்னை புறப்பட்டது.
செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார் ராம்குமார். போலீஸார் அவரை சுற்றி வளைத்தபோது கையில் இருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தில் கூறிக் கொண்டார். இதனால் அவரது கழுத்து, தொண்டைப் பகுதி ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை தென்காசி மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி கொடுத்த பின்னர் பாளையங்கோட்டைக்குக் கொண்டு வந்து அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 18 தையல்கள் போடப்பட்டன. அறுவைச் சிகிச்சையும் நடந்தது
இந்த நிலையில், சுவாதி கொலையை விசாரித்து வரும் சென்னை உதவி போலீஸ் கமிஷனர் தேவராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடி சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கார் மூலம் நெல்லை சென்றனர். நெல்லையில் மாநகர போலீஸ் கமிஷனர் திருஞானம், நெல்லை சரக டி.ஐ.ஜி. தினகரன், நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி விக்ரமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் எஸ்பி விக்ரமன், உதவி கமிஷனர் தேவராஜ் ஆகியோர் மதியம் 1 மணி அளவில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆஸ்பத்திரி டீன் சித்தி அத்திய முனவராவை சந்தித்து ராம்குமார் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அவரை எப்போது சென்னைக்கு அழைத்து செல்ல முடியும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ராம்குமாரை கொண்டு செல்லும் அளவுக்கு அவரது உடல் நிலை தேறியுள்ளதைத் தொடர்ந்து டாக்டர்கள் அழைத்துச் செல்லலாம் என்று போலீஸாருக்குத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாஜிஸ்திரேட் ராம்தாஸ் முன்பு ராம்குமாரை ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டுக்குத் தகவல் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ராமதாஸ் இன்று நெல்லை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
மாஜிஸ்திரேட் முன்பு இரு மனுக்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டன. ஒன்று ராம்குமாரை போலீஸார் பிடித்த அவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பான வழக்கு. இன்னொன்று சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதி தொடர்பானது. ராம்குமாரிடம் நீதிபதி ராமதாஸ் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பெற்றார். அதன் பின்னர் ராம்குமாரை சென்னைக்கு அழைத்துச் செல்ல விசாரணை அதிகாரி தேவராஜுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக ராம்குமாரை சென்னைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் முடிவு செய்துள்ளனர். நாளை காலை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராம்குமார் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ராம்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வருகின்றனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த வேனில் ஒரு காது மூக்குத் தொண்டை நிபுணர், அறுவைச் சிகிச்சை நிபுணர், நர்சிங் உதவியாளர் என3 பேர் இடம் பெற்றுள்ளனர். ராம்குமாரை அவரது வார்டிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மிகுந்த பாதுகாப்புடன் போலீஸார் இடமாற்றினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் சென்னைக்குப் புறப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ், சென்னைக்குக் கிளம்பியுள்ளது. முன்னதாக ராம்குமாரைப் பார்க்க மக்கள் கூட்டம் பெருமளவில் மருத்துவமனையில் கூடியிருந்தது. பத்திரிகையாளர்களும் குவிந்து விட்டனர்.
சென்னைக்குக் கொண்டு வரும் ராம்குமார் நாளை காலை எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications