ஜவ்வாய் இழுக்கும் கரூர் பேருந்து நிலைய விவகாரம்!
கரூர்: கரூரில் புதிய பேருந்து நிலையம் எங்கே அமையும் என மூலை முடுக்குகளில் எல்லாம் பட்டிமன்றம் நடைபெறுகின்றது.
கரூரில் தற்போது செயல்பட்டு வரும் முத்து குமாரசாமி பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த திமுக ஆட்சியில் கரூர் பேருந்து நிலையத்தை புறநகருக்கு மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கரூர் பேருந்து நிலையத்தை மாற்ற மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே போல தற்போதயை நகராட்சி சார்பில், நகராட்சி கூட்டத்தில், கருப்பம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து 42வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஏகாம்பரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது, கரூர் முத்து குமாரசாமி பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதால், கருப்பம்பாளையம் புதிய பேருந்து நிலைய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம்.
மேலும், கருப்பம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைப்பது சரியில்லை. வரும் காலத்தில் பேருந்து நிலையத்தில் மறு சீரமைப்பு செய்ய போதிய இடம் கிடைக்காது. எனவே, திருச்சி மற்றும் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கரூர் பேருந்து நிலையத்தை இரண்டாக பிரித்து அமைக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications