நாட்டின் மிக முக்கிய மாநிலத்திற்கு முழு நேர கவர்னர் இல்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?
சென்னை: நாட்டின் மிக முக்கிய மாநிலமான தமிழகத்திற்கு இதுவரை முழு நேர ஆளுநரை நியமிக்காமல் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட பதிலே தராமல் மெளனம் காத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழகம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரும் தள்ளாட்டத்தில் உள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை, ஆளுங்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. அரசு நிர்வாகம் நடக்கிறதா என்றே புரியவில்லை.
எங்கு பார்த்தாலும் போராட்டங்கள். போராட்டமே வாழ்க்கையாகப் போய் விட்டது தமிழக மக்களுக்கு. இப்படி மக்களை போராட்டக் களத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும் கட்சிகளுக்கு மத்தியில், முழு நேர ஆளுநரை நியமிக்காமல் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

ஆளுநர் இல்லை
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு இடைக்கால ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர ராவ் நியமிக்கப்பட்டார்.

ஒரு வருடமாகப் போகிறது
தொடர்ந்து வித்யாசாகர ராவ்தான் தமிழக ஆளுநர் பொறுப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது மும்பையிலிருந்து வருகிறார். இங்கு சில நாட்கள் இருந்து விட்டு திரும்பப் போய் விடுகிறார். இன்னும் இரண்டரை மாதத்தில் ஒரு வருடமாகி விடும், தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இல்லாமல்.

ஏன் இவ்வளவு அலட்சியம்?
தமிழகத்தில் அரசியல் ஸ்திரமில்லை. மக்கள் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான அரசியல் பேரங்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்வாகம் நடக்கிறதா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் முழு நேர ஆளுநர் அவசியம் என்பதை மத்திய அரசு உணராமல் உள்ளதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.

எதற்காக காத்திருக்கிறார்கள்?
முழு நேர ஆளுநர் இருந்தால் மட்டுமே நினைத்த நேரத்தில் பல்வேறு தரப்பினரும் ஆளுநரைப் பார்க்க முடியும். கோரிக்கைகளை விடுக்க முடியும். மாநில அரசு மீது குறை இருந்தால் அவரிடம் முறையிட முடியும். ஆளுநருக்கும் அப்போதுதான் மாநில அரசை கண்காணிப்பில் வைக்க முடியும். ஆனால் முழு நேர ஆளுநரை நியமிக்காமல் யாருக்காக, எதற்காக, எந்த சூழலுக்காக மத்திய அரசு காத்துள்ளது என்பதுதான் தெரியவில்லை.

ஆந்திரா - தெலுங்கானாவைப் பாருங்கள்
இதுவே ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக இருந்த நரசிம்மன் பதவி ஓய்வு பெற்ற பிறகும் கூட தொடர்ந்து பதவி நீட்டிப்பு தரப்பட்டுள்ளார். ஆனால் ரோசய்யாவுக்கு அப்படி பதவி நீட்டிப்பு தரப்படவில்லை. விரட்டாத குறையாக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஏன் இந்த இரட்டை நிலை என்று தெரியவில்லை.

தமிழகத்திற்கு இவ்வளவுதான் மரியாதை
நாட்டின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். அதுவும் அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக பல்வேறு போராட்டங்கள், சிக்கல்களை சந்தித்துக் கொண்டுள்ள மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்திற்கு முழு நேர ஆளுநரை நியமிக்காமல் காலம் தாழ்த்துவது என்பது அந்த மாநிலத்தை அவமதிக்கும் செயல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.
தமிழகத்திற்கு இவ்வளவுதான் மரியாதை போல.












Click it and Unblock the Notifications