அட, 'டெல்லிவாலா' கேஜ்ரிவால் மதுரைக்காரராமே??
மதுரை: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான அரவிந்த் கேஜ்ரிவால், மதுரையில் பிறந்தவர் என்றும், ஆனால் அவர் இரண்டு இடத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும், இதை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாகவும் மதுரையைச் சேர்ந்த இரண்டு வக்கீல்கள் புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
டெல்லியைக் கலக்கியதோடு, நாட்டையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியவர் கேஜ்ரிவால். இவர் டெல்லியின் அடுத்த முதல்வராகவும் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் கேஜ்ரிவாலுக்கு எதிராக மதுரையிலிருந்து இரண்டு பேர் கிளம்பியுள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர்களான முத்துக்குமார், ஸ்டாலின் மோகன்தாஸ் ஆகிய இருவரும் கூறுகையில், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இரண்டு இடங்களில் பிறப்புச் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது.

அதாவது 27.12.1970ல் கேஜ்ரிவால் பிறந்ததாகவும், அவருடைய தந்தை பெயர் ராம்ஜிராவ் கெய்வாக்ட், தாயார் பெயர் கீதாதேவி என்றும், நிலையான வீட்டு முகவரி புது டெல்லி என்றும் சான்றிதழில் உள்ளது.
அதேசமயம், குழந்தை பிறப்பின்போது பெற்றோரின் முகவரி எண்: 27, கற்பகம் நகர், மதுரை -7 என்று உள்ளது. இது சட்டப்படி தவறானதாகும். எனவே இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரவுள்ளோம் என்று கூறினர்.
கேஜ்ரிவால் எங்கு பிறந்தார் என்பது தெளிவுபடுத்தப்படும் வரை அவரை முதல்வராக பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரவுள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சோழவந்தான் சுப்பிரமணியம் சாமி போல...
கிட்டத்தட்ட சுப்பிரமணியம் சாமி கதை போல மாறுமோ கேஜ்ரிவால் கதை என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது. சுப்பிரமணியம் சாமியும் இப்படித்தான் திடீரென ஒரு நாள் வந்து எனக்குச் சொந்த ஊர் சோழவந்தான் என்று அத்தன பேரையும் அதிர வைத்தார்.
அதேபோல நானும் மதுரையில்தான் பிறந்தேன் என்று கேஜ்ரிவால் சொல்வாரா.. அல்லது டெல்லியில்தான் பிறந்தேன் என்று விளக்குவாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications