அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் ஆளையே காணோமே? நிர்மல் கேட்ட கேள்வி! ஆமா.. எங்கவாம்?
கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும், அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக நேற்று சோதனையைத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், அசோக் தற்போது எங்கே இருக்கிறார் என்பது தொடர்பான பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் உள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கரூர், திருப்பூர், கோவை ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அமைச்சர் தம்பியை குறிவைத்த ஐ.டி :
அமைச்சரின் தம்பி, நண்பர்கள், நெருக்கமானவர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற தகவல் கிடைத்ததும், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அங்கு குவிந்தனர்.
அடையாள அட்டையை காட்டுமாறு வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் 4 அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. மேலும், திமுக தொண்டர் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரி, கையால் தாக்கியதும் குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பரபரத்த ரெய்டு :
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை முடிவில் ஒரு லேப்டாப் மற்றும் ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வீட்டில் 30 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் ரெய்டு பரபரத்த நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் பெயர் அதிகமாக உச்சரிக்கப்பட்ட நிலையிலும் அசோக் வெளியில் எங்கும் வரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி துறை ரீதியான கூட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆனால், அசோக் யார் கண்ணிலும் தென்படவில்லை.
அசோக் குமார் எங்கே? :
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கட்சியிலும், நிர்வாகத்திலும் நம்பிக்கையானவராக, கிட்டத்தட்ட அவருக்கு எல்லாமுமாகச் செயல்படும் அசோக் மீது வருமான வரித்துறை குறிவைத்துள்ள நிலையில், அசோக் தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரங்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.

பாஜக, அதிமுகவினர் பலரும் இந்த ரெய்டு பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அண்மையில் அதிமுகவில் இணைந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், "அமைச்சரின் தம்பி அசோக் நேற்று முதலே காணவில்லையே.. என்னாச்சு?" எனக் கேட்டு ட்விட்டரில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, பலரும் அசோக் எங்கே இருக்கிறார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அசோக் குமார், தற்போது டெல்லியில் முகாமிட்டிருப்பதாக கரூர் திமுக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. வருமான வரித்துறை தனது வீடு, அலுவலகங்கள், மற்றும் தனக்கு நெருக்கமான பலரின் இடங்களை சுற்றி வளைத்து சல்லடை போட்டு வரும் நிலையில், டெல்லி சென்று வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ள தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து அசோக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் எனக் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications