சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்காரப்போவது எந்த இடம்?- கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சட்டசபையில், அவர் அமைச்சராக இருந்த போது உட்கார்ந்த இடத்தில் அமர்வாரா? அல்லது முதலமைச்சருக்கு உரிய இருக்கையில் உட்காரப் போகிறாரா? என்பதை அறிய சட்டசபை கூடும் நாளான டிசம்பர் 4ம் தேதியை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருப்பதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் 1339 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் இப்போது ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இது பொம்மை ஆட்சி, தேர்தல் நேரத்தில் மக்களிடம் வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நூறு சதவீதம் நிறைவேற்றியவர் கருணாநிதி. அவர் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்தார்.
ஆனால் இப்போது நடைபெறும் ஆட்சி என்ன நிலைமையில் இருக்கிறது. முதல்வராக இருந்த ஒரு அம்மையார் பின்னணியில் அவர் சொல்வதை செய்பவராக இப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார். அவரை பொறுப்புடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டாமா?

2006 முதல் 2011 வரை தி.மு.க. தலைமையில் ஆட்சி இருந்த போது ஜெயலலிதா ஒரு கருத்தை கூறி வந்தார். அதன் பிறகு 2011ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நம்மை பார்த்து முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசு என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பார். இன்று அவரது நிலைமை என்ன?
மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று அவர் குறிப்பிட்ட அரசு 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது. ஆனால் மெஜாரிட்டி அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா 3 ஆண்டுகளில் பதவியை இழந்து விட்டார். சட்டசபையில் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் 125 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

இதில் எத்தனை திட்டங்களுக்கு அரசு ஆணை வெளியிடப்பட்டது? எத்தனை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது? எத்தனை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அவை எல்லாமே அறிவிப்புகளாகவே இருக்கிறது.
டிசம்பர் 4ம் தேதி சட்டமன்றம் கூடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். கலைஞர் சொல்லித்தான் சட்டசபையை கூட்ட வேண்டுமா? என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். அந்த புத்திசாலி கலைஞர் சொல்லி சட்டசபையை கூட்டினாரா? அல்லது மற்ற தலைவர்கள் கூறியதால் சட்டசபையை கூட்டினாரா?

சட்டசபை கூட்டத்தில் மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. வழக்கம் போல எதிர்க்கட்சிகளை வெளியே தூக்கி போடாமல் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஜனநாயக கடமையாற்ற நாங்கள் வர இருக்கிறோம். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்காரப்போவது எந்த இடம்?

அவர் அமைச்சராக இருந்த போது சட்டசபையில் உட்கார்ந்த இடத்தில் அமர்வாரா? அல்லது முதல்வருக்கு உரிய இருக்கையில் உட்காரப்போகிறாரா? நாட்டு மக்கள் முன்னால் எழுந்துள்ள கேள்வி இது. இதற்கு டிசம்பர் 4ம் தேதி நல்ல பதில் கிடைக்கும். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
இதே கேள்வியை கடந்த சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி கேட்டிருந்தார். இப்போது ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications