கடலோர காவல் படை, நிர்மலா சீதாராமன் மாறுபட்ட கருத்து.. அப்போ, தமிழக மீனவர்களை சுட்டது யார்?
சென்னை: மீனவர்கள் பற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியால் புது சர்ச்சை வெடித்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சில தினங்கள் முன்பு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் அவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் காயமடைந்ததாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீனவர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று மண்டபம் கடலோர போலீசார் கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பேச்சுவார்த்தை
அத்துடன், துப்பாக்கி சூட்டைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராமநாதபுரம் மண்டபம் முகாமில் கடலோர காவல் படை மற்றும் மீனவர்கள் சங்கங்கள் இடையே பேசுவார்த்தை நடைபெற்றது. இதில், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல் படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வருத்தம் தெரிவித்ததாக தகவல்
மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக மீனவர்களிடம் கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என கடலோர காவல்படை உறுதி அளித்ததாகவும், மீனவர்களுடன் நட்பை ஏற்படுத்த மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்த கடலோர காவல்படை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
நிர்மலா சீதாராமன் பேட்டி
இந்த நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில், அளித்த ஒரு பேட்டியில், தமிழக மீனவர்கள் மீது கடலோரக்காவல் படை தாக்குதல் நடத்தவில்லை என்றும் கூறினார். மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உண்மை என்றும் அது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். மீனவர்களை சுட்டதாக கூறப்படும் குண்டு எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
சுட்டது யார்?
நிர்மலா சீதாராமன் பேட்டியால் மீனவர்களை சுட்டது யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் பேட்டி தமிழக மீனவர்களை கொச்சைப்படுத்துவதாக இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலோர காவல் படையினரே ஒப்புக்கொண்ட விஷயத்தை நிர்மலா சீதாராமன் அரசியலுக்காக மாற்றி பேசுகிறாரா என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.