அழைத்து தான் போனேன் என்கிறார் வைகோ: அழைக்கவே இல்லை என்கிறார் அழகிரி
மதுரை: அழகிரி அழைப்பின் பேரில் தான் அவரது வீட்டிற்கு சென்றேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இந்நிலையில் வைகோவை வீட்டுக்கு அழைக்கவே இல்லை என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் உள்ள மு.க. அழகிரியின் வீட்டுக்கு வந்தார். அவர் அழகிரியை சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினார். அப்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழகிரியை கேட்டுக் கொண்டார். அழகிரியும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று கூறி வைகோவை அனுப்பி வைத்தார்.
அழகிரியின் வீட்டில் இருந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அழைப்பு
அண்மையில் நானும், அழகிரியும் மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தோம். அப்போது அவரிடம் எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டேன். அவர் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவர் அழைப்பின்பேரில் தான் இன்று அவரை சந்தித்து பேசினேன் என்றார் வைகோ.

பழைய நினைவுகள்
அழகிரியை வீட்டில் சந்தித்தபோது இருவரும் பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டோம். 1993ம் ஆண்டு நான் அழகிரியை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார் என்று வைகோ தெரிவித்தார்.

டிஸ்மிஸ்
அழகிரியை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அவர் கட்சிக்கு எதிராக செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருணாநிதி கூறினார். டிஸ்மிஸுக்கு முன்பு தான் வைகோ அழகிரியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிரி
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அழகிரி முன்னணி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் வைகோவை வீட்டுக்கு வருமாறு அழைக்கவே இல்லை. வீட்டுக்கு வந்தவரை எப்படி தடுத்து அனுப்பியா வைக்க முடியும் என்று கேட்டுள்ளார்.

முரண்பாடு
அழகிரி அழைத்து தான் அவரது வீட்டிற்கு சென்றேன் என்றார் வைகோ. ஆனால் நான் வைகோவை வீட்டுக்கு அழைக்கவே இல்லை என்கிறார் அழகிரி.












Click it and Unblock the Notifications