மூக்குப் பொடி டப்பாவை பக்கத்தில் வைத்து விட்டு காத்திருக்க வேண்டும்.. இப்படியும் ஒரு சித்தர்!
திருவண்ணாமலை: அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேற்று அருளாசி கொடுத்த மூக்குப் பொடி சித்தர் திருவண்ணாமலையில் பிரபலமானவர். அவர் அருளாசி கொடுக்கும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கிறது.
திருவண்ணாமலையில் ஏகப்பட்ட சாமியார்களைப் பார்க்கலாம். தெருக்களில், சாலைகளில், மண்டபங்களில், மலையில், கோவில்களில் என எங்கு பார்த்தாலும் சாமியார்கள்தான்.
அழுக்குப் படிந்த தேகத்துடன், நீண்ட ஜடா முடியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் பலருக்கு பெரிய பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் பக்தர்களாக இருப்பார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று.
ஒரு வார்த்தைக்காக
இதுபோன்ற சாமியார்களைச் சந்திக்க தொலை தூரங்களிலிருந்தெல்லாம் பலர் வருவார்கள். அந்த சாமியார்களின் ஒரு வார்த்தைக்காக பல மணி நேரம் காத்திருப்போரை எல்லாம் பார்க்க முடியும் திருவண்ணாமலையில்.
மூக்குப் பொடி சித்தர்
அப்படிப்பட்ட சாமியார்களில் ஒருவர்தான் இந்த மூக்குப் பொடி சித்தர். இவரது பெயர், ஊர் விவரமெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதிகம் பேச மாட்டார். பச்சை சால்வையுடன் காட்சி தருவார். அடிக்கடி மூக்குப் பொடி போடுவார்.
Recommended Video
மெளனத்தில்
பெரும்பாலும் மெளனமாகவே இருப்பார். இவர் யாரையாவது நிமிர்ந்து பார்த்தால் அல்லது ஏதாவது பேசினால் அவர்களுக்கு அதுதான் அருளாசி. அந்த ஒரு வார்த்தைக்காகவே பல மணி நேரம் காத்திருப்பார்களாம் பக்தர்கள்.
பார்த்தால் போதும்
இவர் பார்ப்பதே மிகப் பெரிய விஷயம். பேசினார் என்றால் அதை மிகப் பெரிய யோகமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இவரின் பார்வை அருளைப் பெற தொலை தூரங்களிலிருந்து பலரும் வருகிறார்கள். குறிப்பாக பெரும் பெரும் பணக்காரர்கள் தொழிலதிபர்கள் காத்துக் கிடப்பது சகஜம் என்பது திருவண்ணாமலை மக்களுக்கு சகஜமான ஒன்று.
பார்க்கலாம், மூக்குப் பொடி சித்தரின் அருளாசி, தினகரனை உயர்த்துமா என்பதை.