சிறைக் கொட்டடியில் சிதைந்து போகாமல் உறுதியுடன் போராடிய பேரறிவாளன், முருகன், சாந்தன்
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் 23 ஆண்டுகாலம் தூக்கு கொட்டடியில் நின்றிருந்த போதும் உறுதியுடன் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தங்களுக்கான நீதி கோரி போராட்டம் நடத்தி வென்றுள்ளனர்.
பேரறிவாளன் ஜோலார்பேட்டை நன்கறிந்த திராவிடர் கழகத்து குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை குயில்தாசன் ஒரு ஆசிரியர். சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் பட்டய படிப்பு முடித்திருந்தார் பேரறிவாளன்.
அந்த இளம் வயதில்தான் ராஜிவ் கொலை வழக்கில் "9 வோல்ட்" பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்காக பெற்றோராலேயே ஒப்படைக்கப்பட்ட இளைஞன்தான் பேரறிவாளன். அதன் பிறகு விசாரணை காலத்தில் பேரறிவாளன் அனுபவித்த சித்தரவதைகள் ஏராளம்.

26 பேருக்கும் தூக்கு
ராஜிவ் வழக்கை விசாரித்த சென்னை தடா நீதிமன்றம் 26 தமிழர்களையும் தூக்கிலிட உத்தரவிட்டு நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அப்போது முதல் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நாடு முழுவதும் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்.

4 பேருக்கு தூக்கு
பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகிய நால்வருக்கு மட்டும் தூக்கு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் 2000ஆம் ஆண்டு நளினிக்கான தூக்கு ரத்தானது.

சிறையிலும் படிப்பாளி
சிறைக் கொட்டடியில் இருந்தாலும் தமது வழக்கு தொடர்பான அத்தனை விவரங்களையும் நன்கு அறிந்து வைத்திருந்தார் பேரறிவாளன். தூக்கு தண்டனை தொடர்பான வழக்கு விவரங்கள், சட்ட பிரிவுகளை நன்கு கற்றறிந்தார் பேரறிவாளன். சிறையில் இருந்தபடியே தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டயப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார் பேரறிவாளன்.

இணையதளத்தில்..
சிறையில் இருந்தாலும் பேரறிவாளன் ஃபேஸ்புக், ட்விட்டர், இணையதள பக்கம் என அனைத்திலும் தமது வழக்கு பற்றிய விவரங்கள், தூக்கு தண்டனை வழக்குகள் பற்றிய செய்திகளை பதிவு செய்து வந்தார்.

நூல்கள்..
சிறையில் இருந்தபடியே தமக்கு தூக்கு விதிக்கப்பட்டது எப்படியெல்லாம் தவறானது என்பதை விவரிக்கும் நூல்களையும் எழுதினார் பேரறிவாளன்.

சாந்தன், முருகன்
ராஜிவ் வழக்கில் தற்போது தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ள சாந்தனும் முருகனும் தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களாக பணியாற்றியவர்கள். இவர்கள் ராஜிவ் வழக்கில் தொடர்புடைய சிவராசன் மாஸ்டரின் கீழ் பணியாற்றியவர்கள். இவர்களில் முருகன், ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை காதலித்து திருமணம் செய்தவர். நளினி சென்னையை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications