திருச்செந்தூரில் மோதும் சரத்குமார்- அனிதா ராதாகிருஷ்ணன்: வெற்றி யாருக்கு?
சென்னை: திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு எதிராக திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வேட்பாளரான சரத்குமாருக்கும், நான்கு முறை போட்டியிட்டு வென்று தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையே பலத்த போட்டு நிலவி வருவதால் வெற்றி யாருக்கு கிட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக உடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சரத்குமார் கடந்த வாரமே திருச்செந்தூர் முருகனை வணங்கிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
திமுக வேட்பாளராக எதிர்பார்த்தது போலவே அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் சவாலை சரத்குமார் சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்செந்தூரில் சரத்குமார்
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில், சரத்குமார் அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அவர் தென்காசி தொகுதியில் போட்டியிடவே விருப்பம் தெரிவித்து வந்தார். அவருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவரும் களப்பணியை தொடங்கிவிட்டார்.

சரத்குமாருக்கு பலம்
சரத்குமாரை பொறுத்தவரை திருச்செந்தூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அனிதா ராதாகிருஷ்ணன் வாக்காளர்களை தயார்படுத்தியுள்ள நிலையில், சரத்குமார் இனிமேல் தான் வாக்காளர்களைக் கவரவேண்டும்.

நடிகர் என்ற அறிமுகம்
பிரபலமான நடிகர் என்பதாலும், தென்மாவட்ட மக்கள் மத்தியில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளவர் என்பதாலும் வாக்காளர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் அவருக்கு கடினம் எதுவும் இருக்காது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இரட்டை இலை கூடுதல் பலம்
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே இருந்து வந்துள்ளது. எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால் சரத்குமாருக்கு கூடுதல் பலம் என்கின்றனர்.

மீனவர் வாக்குகள்
இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி திருச்செந்தூர் தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்த ஒரு தொகுதியையே குறிவைத்து வேலை செய்வார்கள். மேலும், இந்த தொகுதியில் கணிசமாக உள்ள அதிமுக ஆதரவு மீனவர் ஓட்டுகளும் சரத்குமாருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் வியூகம்
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கி, ஆதரவு திரட்டி வருகிறார்.

மகளிரை கவர்ந்த அனிதா
தொகுதி பெண்களைக் கவர பலவித போட்டிகள் நடத்தி வெயிட்டாக பரிசுகளை வழங்கி கவனித்துள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். இளைஞர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கி வாக்காளர்களை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

சரிசமமான வெற்றி
இத்தொகுதி 2009 இடைத்தேர்தல் உட்பட இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 6 முறை திமுக வென்றுள்ளது. அதிமுக 6 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

4 முறை வென்ற அனிதா
கடந்த 2011 தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக அமோக வெற்றிபெற்ற போதிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றிய நிலையிலும், திருச்செந்தூர் தொகுதியில் திமுக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். கடந்த 2001, 2006ல் அதிமுக சார்பிலும், 2009 இடைத்தேர்தல் மற்றும் 2011 தேர்தலில் திமுக சார்பிலும் அவரே வெற்றி பெற்றுள்ளார்.

சாதகம், பாதகம்
கடந்த 2001 முதல் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை நிறை வேற்றியிருக்கிறார். அந்த திட்டங்கள், காங்கிரஸ் கூட்டணி, காயல்பட்டினம் இஸ்லாமிய வாக்குகள் போன்றவை அவருக்கு வெற்றியை எளிதில் பெற்றுத்தரும் என, அனிதாவின் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

அதிருப்தியில் திமுகவினர்
கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட அவர், பின்னர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது தொகுதி மக்கள் மத்தியிலும், உள்ளூர் திமுகவினர் மத்தியிலும் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்

அனிதாவிற்கு சறுக்கலா?
கடந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி இம்முறை மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. திருச்செந்தூர் தொகுதியில் அக்கட்சிக்கென கணிசமான வாக்குகள் உள்ளன. அது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

வெற்றி கடும் சவால்
மக்கள் நலக்கூட்டணியை பொறுத்தவரை இந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் அவர்கள் கணிசமான வாக்குகளை பிரிப்பதற்கு வாய்ப்புள்ளது.

வெற்றி யாருக்கு?
எனவே, திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை. மிகக் கடினமாக வேலை செய்தால் மட்டுமே வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்பது மட்டும் உண்மை. வெற்றிக்கனியை இம்முறை சரத்குமார் கைப்பற்றுவாரா? அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முருகப்பெருமானின் அருள் இம்முறை யாருக்கு கிடைக்கிறது பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications