ஜெ., சமாதியில் மாறி மாறி நடிக்கிறாங்க... அரசியலில் நடிக்க விரும்பவில்லை - நடிகை ஆர்த்தி
அரசியலில் நடிக்க விருப்பமில்லை என்று அதிமுகவில் இருந்து விலகிய நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
சென்னை: சினிமா, சீரியலில் நடிப்பதைப் போல அரசியலில் தனக்கு நடிக்கத் தெரியாது என்றும் தான் நடிக்க விரும்பவில்லை என்றும் நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்தினாலே அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.
நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் இரு அணிகளுக்கும் மாறி மாறி சென்று வருகின்றனர். இந்த நிலையில் பிரச்சார களத்தில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகை ஆர்த்தி அதிமுகவை விட்டு விலகி விட்டதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.
நடிக்கத் தெரியாது
தனது முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்த்தி, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று, ஒவ்வொருவரும் அரசியல் நாடகம் போடுகிறார்கள். எனவே, கட்சியில் இருந்து விலகுகிறேன். எனது, ராஜினாமா கடிதத்தை தலைமை அலுவலகத்தில் யாரை சந்தித்துக் கொடுப்பது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
குழப்பமாக உள்ளது
உலகமே, இவர்களின் கூத்தை பார்த்து சிரிக்கிறது. நான் சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். மக்கள் முன் நடிக்க விரும்பவில்லை. அரசியலில் நடிக்கத் தெரியாததால் கட்சியில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
எந்த அணியிலும் இல்லை
என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஒரு அணிக்கு அனுப்பினால் வேறு அணியில் இருப்பவர்கள் தன்னை அந்த அணியைச் சேர்ந்தவர் என்று நினைப்பார்கள். நான் எந்த அணியிலும் இல்லை. ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் நீடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், இனி எந்த கட்சியிலும் சேரமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்ய, கட்சி பொறுப்பு அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம் பறிபோனதை அரசியல் ரீதியான தோல்வியாகக் கருதி, அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் நடிகை ஆர்த்தி அதிமுகவில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.