ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்த திமுக.. ஆட்சி கவிழுமோ? கதிகலங்கும் எடப்பாடி கோஷ்டி!
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சந்திப்பதால் அமைச்சர்கள் பலரும் பீதியில் உள்ளனராம்.
சென்னை: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட தொடங்கியிருக்கும் திமுகவின் நடவடிக்கைகளால் ஆட்சி கவிழுமோ என எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனராம்.
ஜெயலலிதா மறைந்த போது அதிமுகவை கலகலக்க வைக்கும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலினோ, ஜனநாயக ரீதியாகவே நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்வோம் என கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஏதேனும் அதிசயம் நிகழும் என ஆரூடம் கூறப்பட்டது. அப்போதும் திமுக தடாலாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

அதிமுக கோஷ்டிகள்
இப்போது அதிமுகவின் சசிகலா கோஷ்டியோ தினகரன், எடப்பாடி அணிகளாக பிரிந்து நிற்கின்றன. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்தமாக அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளும் பாஜகவை ஆதரிக்கின்றன.

ஆடுபுலி ஆட்டம் தொடக்கம்
இந்நிலையில்தான் திமுக ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

முரசொலி விழாவுக்கு அழைப்பு
அத்துடன் தொடர்ந்தும் ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி சந்தித்து பேசி வருகின்றனர். இச்சந்திப்புகளின் உச்சகட்டமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பவள விழாவுக்கு இந்த மூவருக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
இதுநாள் வரை அமைதியாக இருந்த திமுக இப்போது அதிரடியாக களத்தில் இறங்கிவிட்டது என்பதையே இந்த சந்திப்புகளும் அழைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன. இப்போது அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள்... நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் என வியூகம் வகுக்க தொடங்கிவிட்டது திமுக.

ஆட்சி கவிழும்?
இதனால் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் பெரும் பீதியில் உள்ளனர். ஜனாதிபதி தேர்தல் வரையாவது அதிகாரத்தில் இருந்துவிடலாம் என நினைத்த தங்களது கனவு தகர்ந்து போய்விடுமோ என கதிகலங்கிப் போயுள்ளனராம் அமைச்சர் பெருமக்கள்.












Click it and Unblock the Notifications