நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்றவாதி வைகோவுக்கு மலேசியா தடை- கள்ள மவுனம் சாதிக்கும் மத்திய அரசு!
தலைசிறந்த நாடாளுமன்றவாதியான வைகோவுக்கு மலேசியா தடை விதித்துள்ள விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறது மத்திய அரசு.
சென்னை: இந்தியாவின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு மலேசியா தடை விதித்துள்ளதை கண்டும் காணாமல் மத்திய அரசு கள்ள மவுனம் சாதிப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் ராஜ்யசபா எம்.பியாக பல ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தை தமது ஆணித்தரமான குரல்களால் அதிர வைத்தவர் வைகோ. இந்திரா காந்தியோடும் ராஜீவ் காந்தியோடும் ராஜ்யசபாவில் மல்லுக்கட்டியவர் வைகோ.
ஈழத் தமிழர் பிரச்சனையில் ராஜீவ் காந்தியை, மிஸ்டர் ராஜீவ்காந்தி என விளித்து எச்சரிக்கை செய்தவர். இன்று தமிழர்களைப் பொறுக்கி என இழித்து பேசும் சுப்பிரமணியன் சுவாமியின் அவதூறுகளுக்கு பதிலடி தரும் வகையில் நாடாளுமன்ற வளாகத்திலேயே, யெஸ் வி வில் கில் யூ என பதிலடி தந்தார் வைகோ. உடனே அய்யய்யோ எனக்கு வைகோ கொலை மிரட்டல் விடுக்கிறார் என மத்திய அரசிடம் அலறிப் போய் தஞ்சமடைந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

வாஜ்பாயின் செல்லப்பிள்ளை
வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன்சிங் என நாட்டின் பிரதமர்களால் பெரிதும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட்ட சிறந்த நாடாளுமன்றவாதி வைகோ. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவின் முதுபெரும் தலைவர் வாஜ்பாயின் செல்லப்பிள்ளையாகவே திகழ்ந்தவர் வைகோ. தமக்கு அமைச்சர் பதவி கிடைத்த போதும் அதை கட்சியினருக்காக தாரைவார்த்து கொடுத்தவர்.

சிறந்த நாடாளுமன்றவாதி
வைகோவின் அரசியல் நிலைப்பாடுகள் என்னதான் கருத்து வேறுபாடு இருக்கலாம்.. ஆனால் நாடு போற்றிய ஒரு நாடாளுமன்றவாதியை மலேசியா நாடு அவமதிக்கிறது; இந்திய குடிமகனே அல்ல... இலங்கைவாசி என திட்டமிட்டு அவமதித்து திருப்பி அனுப்புகிறது.

மவுனம் காக்கும் மத்திய அரசு
இச்செய்தி வெளியான நிலையில் கொந்தளித்திருக்க வேண்டிய இந்திய மத்திய அரசு கள்ள மவுனம் காக்கிறது. செவ்வாய்கிரகத்தில் சிக்கினாலும் இந்திய தூதரகம் உதவி செய்யும் என வாய்ச்சவடால் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு இப்போது மலேசியா செவ்வாய்கிரகத்துக்கு அப்பால் இருக்கிறது போல் தெரிகிறது.

வைகோவை அவமதிப்பதா?
லோக்சபா தேர்தலின் போது வைகோவை வானளாவ புகழ்ந்த பாஜக தலைவர்கள் அவருக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் மவுனிகளாக இருப்பதுதான் அவரை மதிக்கும் லட்சணமா? வைகோ சென்றது மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வரின் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள... வைகோ ஆபத்தானவர் என்றால் உங்க நாட்டு மாகாண துணை முதல்வரும் ஆபத்தானவரா? என எதிர்கேள்வி கேட்டு மடக்க வேண்டிய மத்திய வெளியுறவுத்துறை எதுவும் சொல்லாமல் அமைதி காப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல்தான்!












Click it and Unblock the Notifications