வாழ வைத்த தெய்வம் வாழ்ந்த வீட்டிலேயே ரெய்டா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது சி.ஆர்.சரஸ்வதி பாய்ச்சல்
முதல்வரையும், துணை முதல்வரையும் வாழ வைத்த தெய்வத்தின் வீட்டில் ரெய்டு நடத்த அனுமதிக்கலாமா என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போயஸ் கார்டனில் ரெய்டு நடத்த முதல்வரும், துணை முதல்வரும் அனுமதித்தது ஏன். இது அவர்களை வாழ வைத்த தெய்வத்தின் இடம் அல்லவா என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என வருமான வரித் துறையினரால் வளைக்கப்பட்டனர். கடந்த சில நாள்களுக்கு முன் 5 நாள்கள் இந்த ரெய்டு நீடித்தது.
இந்நிலையில் நேற்றிரவு ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நிகழ்த்தினர். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு கோயில்
இதுகுறித்து டிடிவி தினகரனின் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில் போயஸ் கார்டனில் ரெய்டு நடந்தது குறித்து மிகவும் வேதனைப்படுகிறோம். இந்த இடம் ஜெயலலிதாவின் முகத்தை பார்ப்பதற்காக தவம் கிடந்த இடம். காலையில் மாலையில் என இங்கே வந்து செல்வோம். எங்களை பொருத்தமட்டில் இது ஒரு கோயிலாகும்.
ரெய்டு ஏன்
6 மாதமாக இந்த வீடு பூட்டியிருக்கிறது. கடந்த 3 மாதங்களாக தமிழக அரசு நினைவில்லமாக்குவதற்காக அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. கடந்த 5 நாள்களாக சசிகலா உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் ரெய்டு நடந்த போது போயஸ் தோட்டத்திலும் ரெய்டு நடந்தது. அப்போது நாங்கள் அதை தடுக்கவில்லை.
முதல்வருக்கும் ரெய்டில் பங்கா
ஆனால் ரெய்டுகள் முடித்துவிட்டு திடீரென இரவு 9 மணிக்கு மீண்டும் வந்து ரெய்டு நடத்துவது ஏன். அதுவும் பூட்டியிருக்கும் வீட்டில் ரெய்டு ஏன். ஒரே ஒரு சந்தேகம்தான் எங்களுக்கு. அதாவது ஜெயலலிதா வாழ்ந்த வீடு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அவர்களிடம் அனுமதி பெறாமல் இந்த ரெய்டு நடத்திருக்காது. தெரிந்தும் இந்த ரெய்டுக்கு அனுமதித்தது ஏன்.
தமிழக அரசு விளக்க வேண்டும்
அவர்களை வாழ வைத்த தெய்வம் வாழ்ந்த வீடு இது. இதற்கு முதல்வரும், துணை முதல்வரும் உடன்படுகிறார்களா. இதற்கு உரிய விளக்கத்தை தமிழக அரசு தர வேண்டும் என்றார் சி.ஆர்.சரஸ்வதி.