Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கள ஜேவிபி மீதான காதலால் என்பதால் சட்டசபையில் இருந்து வெளியேறியது சிபிஎம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் மீது மார்க்சிஸ்ட் கட்சி கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த செயல் போராடும் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவே கூடாது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. இதற்காக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டசபையிலும் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபை தீர்மானத்தை மீறி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று சட்டசபையின் சிறப்பு கூட்டம் மாலை 6 மணிக்கு கூட்டப்பட்டு சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளக் கூடாது என்று மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெளியேறியதைக் கூட ஏற்கலாம்.

தமிழின துரோகம்

தமிழின துரோகம்

ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி வெளியேறியதுதான் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்கின்றனர் தமிழின உணர்வாளர்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு என்பதால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்வதை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அப்படி என்ன கோபம் என்பதுதான் அவர்களது கேள்வி.

அதிமுகவுக்கு ஜால்ரா

அதிமுகவுக்கு ஜால்ரா

தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போராடுவது வழக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் அதுவும் தா. பாண்டியன், மாநில செயலராக வந்த பிறகு அது அண்ணா திமுகவின் தொழிற்சங்கம் போல ஒரு கிளையாகவே மாறிவிட்டது. அது இலங்கை பிரச்சனையாக இருந்தாலும் கூடங்குளம் அணு உலை பிரச்சனையாக இருந்தாலும், முதல்வர் ஜெயலலலிதா என்ன சொல்கிறாரோ அதுவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகவே இருந்து வருகிறது. இதன் உச்சமாகத்தான் பாரதிய ஜனதாவின் ஆதரவுடன் ஜெயலலிதா பிரதமரானாலுமே மகிழ்ச்சிதான் என்று தமது அடிவருடித்தனத்தை வெளிப்படுத்தினார் தா. பாண்டியன்.

ராஜ்யசபா சீட்டுக்கு

ராஜ்யசபா சீட்டுக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ இந்த அளவுக்கு கீழிறங்கி போகாவிட்டாலும்கூட கொஞ்சம் நாகரீகமாகவே அதிமுகவை ஆதரித்து வந்தது. பதவி, பணத்துக்கு ஆசைப்படாத இடதுசாரிகள் அனைவருமே இப்படி அதிமுகவை அண்டிப் பிழைப்பதற்கு காரணமே பாழாய்போன ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக மட்டுமேதான். இப்படி உன்னை மிஞ்சி நானில்லை.. என்னை மிஞ்சி நீயில்லை என்கிற அளவுக்கு அதிமுகவுடன் ஐக்கியமாக இருக்கின்றனர் இடதுசாரிகள்.

காங்கிரசைப் போல சிபிஎம்

காங்கிரசைப் போல சிபிஎம்

ஆனால் நேற்று தமிழக சட்டசபையில் அதிமுக அரசு கொண்டு வந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டது. ஏற்கெனவே கொண்டு வந்த தீர்மானம் போதும்.. இப்போது எதற்கு இன்னொரு தீர்மானம் என்கிறார் அக்கட்சியின் எம்.எல்.ஏ. செளந்தரராஜன். அட காங்கிரஸ் கட்சியும்கூட இதைத்தான் சொல்கிறது!!

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எப்போதும் "தமிழக உணர்வு"க்கு எதிர்ப்பு நிலை எடுப்பதையே காங்கிரஸைப் போலவே வாடிக்கையாக கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. அதையே நேற்றும் வெளிப்படுத்தியிருக்கிறது.

தீர்மானத்தால் 'கொள்கை' பாதிப்பா?

தீர்மானத்தால் 'கொள்கை' பாதிப்பா?

தனித் தமிழ் ஈழம் கோரியெல்லாம் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்துதான் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதிமுகவின் பரம வைரிகளான திமுக, தேமுதிக கூட இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் பங்காளியாக மார்க்சிஸ்ட் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வெளியேறியிருக்கிறது.

ஜேவிபி காதல்

ஜேவிபி காதல்

இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை.. தமிழினப் படுகொலை நிகழ்த்திய சிங்கள நாட்டில் இருக்கும் ஜேவிபி எனும் நேச சக்தி மீதான காதலாகத்தான் இருக்க முடியும். தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் எப்போதும் தவறாமல் கலந்து கொள்கிறவர்கள் இந்த இனப் படுகொலையாளர்களான ஜேவிபி கும்பல்தான்.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை பேசுகிறது மார்க்சியம். ஆனால் இலங்கையிலோ மார்க்சியம் பேசுகிறோம் என்ற பெயரில் ஒரு தேசிய இனத்தையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது ஜேவிபி எனும் மார்க்சிய கட்சி. அந்த இனப்படுகொலை கட்சிதான் தமிழக மார்க்சிஸ்ட் கட்சிக்கு நேச சக்தி. இந்த "சகதி" காதல்தான் சட்டசபையில் தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்க மறுத்து புறக்கணிக்க வைத்திருக்கிறது என்பதல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சப்பை கட்டு

சப்பை கட்டு

அதெல்லாம் இல்லை.. "நாங்கள் ஈழத்துக்கு எதிரானவர்கள்.. இலங்கையை பிரிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு கொண்டவர்கள்" என்றெல்லாம் சப்பையும் சொத்தையுமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் பேசலாம்.. விளக்க வியாக்கியானம் கொடுக்கலாம்.. நேற்று கொண்டு வந்த தீர்மானம்தான் ஈழத்தை உருவாக்கப் போகிறதா? நேற்று கொண்டுவந்த தீர்மானம்தான் இலங்கையை கூறாக்கப் போகிறதா? உங்களது ஜேவிபி காதலுக்கு தமிழக சட்டசபையை அவமதிக்காதீர்கள் என்பதுதான் தமிழின உணர்வாளர்களின் கோப பதிலாக இருக்கிறது.

கட்சி அழிஞ்சிடும்..

கட்சி அழிஞ்சிடும்..

அத்துடன் தமிழகத்தில் ஏதோ சில தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வென்று கொண்டிருக்கின்றனர்.. அனேகமாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கதிதான் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் விடுக்கின்றனர் அவர்கள்.

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டால் என்ன செய்வது? அனுபவிக்கவே வேண்டும்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+