கருணாநிதியை ஜனாதிபதி சந்தித்த படம் வெளியாகாததற்கு காரணம் இதுதானோ?
கருணாநிதியை ஜனாதிபதி நேரில் சந்தித்தாரா என கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: நேற்று குடியரசு தலைவர் கருணாநிதியை பார்க்க வந்தபோது ஏன் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு இன்று மாலை வெளியான காவேரி மருத்துவமனை அறிக்கை விடை தருவதாக உள்ளது.
கருணாநிதியை மருத்துவமனையில் அனுமதித்து 10 நாள் ஆகிவிட்டது. இந்த பத்து நாளில் சில நேரங்களில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைவதாக தெரிவிக்கப்பட்டது. ஓரிரு முறை உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் மருத்துவமனை தெரிவித்தது. இந்த 10 நாளில் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோன்ற புகைப்படங்கள் 2 முறை வெளியிடப்பட்டன.
அதில் ஒரு புகைப்படத்தில் கருணாநிதி முகம் தெளிவாக தெரியாமல் இருந்தது. இருந்தாலும் தொண்டர்கள் கருணாநிதியின் பாதி முகத்தை பார்த்தே மலர்ந்து போய்விட்டார்கள். பின்னர் ராகுல் காந்தி வந்தபோது, கருணாநிதியின் முகம் தெளிவாக தெரிந்தது. அத்துடன் அவரது பல்ஸ், ரத்த அழுத்தம் போன்றவை தெளிவாகவே தெரிந்தது. இதனை பார்த்ததும் தொண்டர்கள், இது போதும் எங்களுக்கு என்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.
போட்டோவை காணோமே
ஆனால் இதற்கு பிறகு கருணாநிதி குறித்த எந்த புகைப்படமும் வெளியிடப்படவில்லை. மீண்டும் குழப்பமும், மனவேதனையும் தொண்டர்களை சூழ்ந்தது. அந்த சமயத்தில் கருணாநிதி நாற்காலியில் உட்கார வைக்கப்படுகிறார், அவருக்கு அந்த சமயத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, நாங்கள் தரும் மருந்துகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு உடல் ஒத்துழைக்கிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை கேட்டு தொண்டர்கள் பூரித்தாலும் போட்டோவை இன்னும் காணோமே என்றுதான் மனம் அலைபாய்ந்தது.
மீண்டும் கலக்கம்
நேற்று பிற்பகல் மீண்டும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தகவல் பரவியதும், "ஆமாம். கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை தெரிவித்தது. அதனால் மீண்டும் தமிழக மக்கள், கலக்கமடைந்தார்கள். அந்த சமயத்தில்தான் குடியரசு தலைவர் கருணாநிதியை பார்க்க மருத்துவமனை வந்தார்.
ஜனாதிபதி சந்தித்தாரா?
பிறகு தன் ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதியை சந்தித்ததாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் என்றும் சொல்லிவிடவும் 'அப்பாடா' என்று பெருமூச்சுவிட்டனர் தொண்டர்கள். ஆனாலும் ராகுல் வரும்போது கருணாநிதியுடன் சேர்த்து வெளியிடப்பட்ட புகைப்படம் குடியரசு தலைவர் வந்தபோது ஏன் வெளியிடவில்லை என்பது தெளிவின்றி உள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் பின்னடைவு என்று செய்தி மதியத்திலிருந்து வரத்தொடங்கி விட்டது.
பல்ஸ் எகிறியது
அப்போது உடல்நலம் குறித்து திருநாவுக்கரசு ஒரு தகவலை சொன்னாலும் சொன்னார், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் தொண்டர்கள் மருத்துவமனையில் குவிய தொடங்கிவிட்டனர். அப்போது கருணாநிதி வழக்கமாக பயன்படுத்தும் காரில் தயாளு அம்மாளை வீல் சேரில் அமரவைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதும் அனைவருக்கும் பல்ஸ் எகிறி போய்விட்டது.
விண்ணை முட்டுகின்றன
தற்போது காவேரி மருத்துவமனை கருணாநிதி உடல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மருத்துவமனை முன் திரண்டிருக்கும் தொண்டர்கள் எழுந்து வா தலைவா என கோஷம் விண்ணை முட்டி கிழிக்கின்றன. இன்னும் ஏராளமானோர் தங்கள் ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
|
லேசாக புரிகிறது
குடியரசுத் தலைவர் கருணாநிதியை பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிடாததற்கான காரணம் இப்போதுதான் லேசாக புரிகிறது. திமுக தலைவர் கருணாநிதி நேற்றே கூட சரியில்லாத உடல் நிலையில்தான் இருந்திருக்க வேண்டும் என்று தொண்டர்கள் ஊகிக்கிருக்கிறார்கள். இதனால்தான் புகைப்படம் வெளியாகவில்லை என்பதை இன்றைய காவேரி மருத்துவமனை அறிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.