திமுக அறிவிப்புக்கு 'பயங்கரமாக' உற்சாகம் காட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன்!!!
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் அடி வயிறு கலங்கிப் போய்க் காணப்பட்டாலும் கூட இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார். பயங்கரமாக வரவேற்று அறிக்கை விடுக்கிறார், பேட்டி கொடுக்கிறார்.
காங்கிரஸ் கட்சியினருக்கு கருணாநிதி மற்றும் திமுகவின் முடிவு ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் அதிகாரப்பூர்வமாக கருணாநிதி அறிவித்து விட்டதால் தற்போது கலங்கிப் போய்க் காணப்படுகின்றனர்.
ஆனாலும் கீழே பிடித்துத் தள்ளி விட்டாலும் கூட மீசையில் மண் ஒட்டலையே என்ற ரேஞ்சுக்கு காணப்படுகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும். விட்டால் பட்டாசு வெடித்து, லட்டு கொடுத்து விழாவே எடுத்தாலும் எடுப்பார் போல.. அப்படி ஒரு உற்சாகம் மனிதருக்கு.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியைப் பாருங்களேன்...

இது எங்களுக்குப் புத்தாண்டுப் பரிசுங்க
திமுக தலைவர் கருணாநிதியின் அறிவிப்பு உண்மையில் எங்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பரிசு போலத்தான். அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம்.

வாசனே சந்தோஷப்படுறாரே...
கூண்டிலிருந்து விடுபட்டுள்ளோம் என்று ஜி.கே.வாசனே வர்ணித்துள்ளார். அப்படியென்றால் எங்களது நிம்மதியைப் புரிந்து கொள்ளலாம்.

பெரிய சுமை இறங்கியது
கருணாநிதியின் அறிவிப்பால் பெரிய சுமையே எங்கள் மீதிருந்து இறங்கி விட்டதாக உணர்கிறோம். உண்மையில் அவர்களால் எங்களுக்கு கறை ஏற்பட்டதுதான் மிச்சம். தற்போது அந்தக் கறை போய் விட்டது.

மறுபடியும் போக மாட்டோமே...
மறுபடியும் திமுகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது.

அவர்கள்தான் துரோகம் இழைத்தவர்கள்
உண்மையில் அவர்கள்தான் எங்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கடந்த திமுக ஆட்சி நடந்தது. அது ஒரு மைனாரிட்டி அரசு என்பதை திமுக மறந்து விடக் கூடாது.

பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறார்கள்
சிபிஐயை நாங்கள் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுகிறார்கள். அது ஒரு தனித்த அமைப்பு. அதை நாங்கள் தவறாகப் பயன்படுத்தவில்லை. ஆனால் காங்கிரஸைக் குறை கூறுவதன் மூலம் பாஜகவுக்கு அவர்கள் ஒத்து ஊதுகிறவர்களாக மாறியுள்ளனர்.

அழுக்கு மூட்டை ஓடிப் போச்சு
எங்கள் மீது இருந்த அழுக்கு மூட்டையை இறக்கி வைத்து விட்டோம். இனி அதை பாஜக சுமக்கப் போகிறது என்று நினைக்கிறோம். ஆனால் ஊழல் கறை படிந்த திமுகவை, பாஜக சேர்க்குமா என்பது சந்தேகம்தான் என்றார் இளங்கோவன்.

மறுபடியும் பிசியாகப் போகிறாரோ ஈவிகேஎஸ்
இது நாள் வரை பெரிய அளவில் அரசியல் செய்யாமல் அமைதியாக போய் வந்து கொண்டிருந்தார் இளங்கோவன். தற்போது திமுகவை வைத்து ஒரு ரவுண்டு அரசியலில் ஈடுபட அவர் முனையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தான் அவரது இந்த பயங்கர உற்சாகம் காட்டுகிறது. இனிமேல் தினசரி ஏதாவது ஒரு அறிக்கை அல்லது பேட்டியை எதிர்பார்க்கலாம் - நாராயணசாமி ரேஞ்சுக்கு.












Click it and Unblock the Notifications