மக்களின் அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க அரசு முயல்வது ஏன்?
ஏழாவது நாள் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தை ஒடுக்க மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி வருகிறது. சில இடங்களில் கண்ணீர் புகை வீசி வருகிறது. இதில் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்ததை போலீஸார் அடக்குமுறையால் அடக்க முயல்வது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் முதல்வரின் முயற்சி அலங்காநல்லூரில் தோல்வி அடைந்தது.
மாணவர்களும் பொதுமக்களும் நிரந்தர சட்டம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால், அங்கு முதல்வர் நுழைய முடியாத வகையில் சாலையில் குழி வெட்டி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்வர் வேறுவழியின்றி சென்னைக்கு தோல்வியுடன் திரும்பினார்.

அரசு நடத்திய ரேக்ளா ரேஸ்
அதையடுத்து, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் மற்றும் நிர்வாகிகளின் தலைமையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது. அதைத் தடுக்க முயன்ற போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. குறிப்பாக, ஈரோட்டில் பாஜக நடத்திய ரேக்ளா ரேஸில், தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் முன்பு மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் அவர் அமைதி காத்தார்.

தீவிரமடைந்த போராட்டம்
இந்நிலையில், முதல்வர் சென்னை விமான நிலையத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு விட்டது. நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறி சென்றார். ஆனால், அவருடைய வார்த்தையில் நம்பிக்கை கொள்ளாத போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் என்று நேற்று முதல் மிக தீவிரமாக போராடி வருகின்றனர்.

போலீஸ் அடக்குமுறை
ஆனால், நேற்று நள்ளிரவுக்குப் பிறகு ஆங்காங்கு மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், சென்னை மெரினா, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து வருகினறனர். மெரினாவில் போராட்டக்காரர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், திருச்சி, சேலம் , விழுப்புரம், பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் பயமுறுத்தியும் குண்டுக்கட்டாக போராட்டக்காரர்களை தூக்கி அப்புறப்படுத்துகின்றனர்.

போராட்டக்காரர்கள் மீது கல்வீச்சு
தற்போது சென்னை நாட்டுக்குப்பம் பகுதியில் மாணவர்கள் மீது போலீசார் கல்லைத் தூக்கி எறிந்து தாக்குதல் நடத்துகினறனர். அப்படி தாக்கியதில் சிறுவன் ஒருவனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பல இடங்களில் நடத்தப்பட்ட தடியடியில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கடலுக்குள் இறங்கி போராட்டம்
சென்னை மெரினா கடற்கரை மீனவப் பெண்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர் என்று குறி வைத்து அவர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் அனைவர் மீதும் லத்தியால் போலீசார் தடியடி நடத்தி வருகினறனர். தமிழகம் முழுவதும் இதே வகையில் தடியடி நடத்தப்பட்டு வருகிறது.

போராட்டத்தை ஒடுக்க முனையும் அரசு
தமிழகம் முழுவதும் மிகவும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. காவல்துறை தனது அராஜகத்தின் மூலம் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்து வருவது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாணவர்கள் அறவழியில் போராடினாலும் அரசு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது என்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், காவல்துறையினர் பேசசுவார்த்தை என்ற பெயரில் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications