கோவையில ஆட்சி நல்லாருக்குன்னு சொன்ன ஆளுநரே... குமரி ஆய்வுக்குப் பிறகு மவுனம் ஏன்?
கன்னியாகுமரியில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த ஆளுநர் அங்கு அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசின் செயல்பாடு நல்ல முறையில் இருக்கிறது, ஆய்வு செய்தால் தான் அரசு எப்படி செயல்படுகிறது என்பதை சொல்ல முடியும் என்று கூறி இருந்தார். ஆனால் குமரியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் அது குறித்து அங்கு அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று கருத்து கூறாமல் மவுனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் திடீரென மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சுவச் பாரத் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆளுநரின் இந்த ஆய்விற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார் என்றும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் ஆய்வு செய்தால் தான் அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது தெரியும். தற்போது ஆய்வு செய்ததால் தான் அரசு நல்ல முறையில் செயல்படுவது தெரிய வந்தது என்றும் சான்றிதழ் கொடுத்தார்.

அரசின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள
அமைச்சர்களும் ஆளுநரின் ஆய்வில் தவறில்லை, அரசின் செயல்பாடுகளைத் தான் அவர் ஆய்வு செய்தார் என்றும் ஆளுநரின் கோவை விசிட்டை நியாயப்படுத்தின. இதனிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 6ம் தேதி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்ற போது நெல்லை பகுதிகளில் ஆய்வில் இறங்கினார்.

முற்றுகையிட்ட மக்கள்
அப்படியே கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் ஆய்வு சென்றவருக்கு ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் ஷாக் கொடுத்தனர். மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று ஆளுநரை முற்றுகையிட்டனர் மக்கள். மற்றொருபுறம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற உறவுகளைக் காணவில்லை என்று தாய்மார்கள் கதற ஆளுநரும் கண்ணீர் விட்டார்.

குமரி ஆய்வுக்குப் பின் மவுனம் ஏன்?
கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு ஆட்சி நல்ல சிறப்பான முறையில் நடப்பதாக சொன்ன ஆளுநர். தற்போது கன்னியாகுமரியில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் மட்டும் எந்த கருத்தையும் கூறாமல் மவுனம் காப்பது ஏன்.

அரசிடம் சொன்னாரா?
அரசின் தவறுகளை நிச்சயம் சுட்டிக்காட்டுவேன் என்று தான் பொறுப்பேற்ற முதல்நாளே சொன்ன ஆளுநர் தற்போது அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று முதல்வருக்கு சொன்னாரா. ஆய்வு செய்த அன்று மாவட்ட அதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதே தற்போது அனைவர் மனதிலும் எழும் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications