18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்த ஜெயலலிதா உடனே ஜாமீன் கேட்பது ஏன்?: ராமதாஸ்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகாலம் இழுத்தடித்துவிட்டு தற்போது தண்டனை பெற்று சிறை சென்றுள்ள ஜெயலலிதா உடனடியாக ஜாமீன் கேட்பது ஏன் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் போராட்டங்கள், அச்சுறுத்தும் போஸ்டர்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றியும் பேசுவதற்காக இன்று செய்தியாளர்களை சந்தித்தார் டாக்டர் ராமதாஸ்,அப்போது அவர் தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் நிழல் அரசு நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
தினந்தோறும் போராட்டங்கள், கடையடைப்புகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுத்தான் சிறைக்குப் போயிருக்கிறார். வன்முறையை கட்டுப்படுத்த கவர்னர் கட்டுப்பாட்டிற்குள் தமிழகத்தின் ஆட்சி வரவேண்டும் என்றார்.
உடனே ஜாமீன் கேட்பதா?
ஜெயலலிதா உத்தமமானவரா? அவர் ஊழல் செய்தவர். சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்த ஜெயலலிதா உடனே ஜாமீன் கேட்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டத்தில் திருத்தம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கூறிய டாக்டர் ராமதாஸ், 6 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்றால் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட வேண்டும். கட்சி உறுப்பினர் பதவி ரத்து, பரப்புரைக்குத் தடை ஆகியவை தொடர்பாக திருத்தம் தேவை என்று வலியுறுத்தினார்.
கர்நாடக மக்களுக்கு பாதுகாப்பு
தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். கர்நாடக மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களுக்கு கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ், கர்நாடக மக்களை சிறைபிடிப்போம். விட்டால் தமிழக முதல்வர் விடாவிட்டால் கர்நாடக முதல்வர். கன்னட சாத்தானை கண்டிக்கிறோம் என்றெல்லாம் போஸ்டர் ஒட்டுவது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பினார்.
ஊடகங்கள் குரல்
அச்சுறுத்தல், விளம்பரம் நிமித்தமாக ஊடகங்கள் குரல் கொடுக்க தயங்குகின்றன. ஆனால் ஊழலுக்கு எதிராக ஊடகங்கள் குரல் கொடுக்கவேண்டும் என்றார் ராமதாஸ்.
கருணாநிதி கலைப்பாரா
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு விசயத்தில் திமுகவினரின் மவுனத்திற்கு காரணம் தெரியாது. அது ஒரு புதிராகவே இருக்கிறது. கருணாநிதி மவுனம் கலைப்பது நல்லது என்றார் ராமதாஸ்.
தலைவர்கள் மவுனம்
ஊழலுக்கு எதிராக ஊடகங்கள் குரல் கொடுக்க வேண்டும். பாஜக தேசிய தலைவர்கள். இடதுசாரிக்கட்சித்தலைவர்கள் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆயிரம் கோடி வசூலிக்கணும்
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் அதிமுகவினர் நடத்திய வன்முறை போராட்டங்களினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அவர்களிடம் இருந்து ரூ.1000 கோடி இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலில் தண்டனை பெற்றவர்கள்
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் இவர் மட்டும்தானா என்றால் நிறைய உதாரணங்கள் இந்தியாவில் இருக்கிறது. லாலு பிரசாத் யாதவ் 10 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் தான் ஜாமின் கிடைத்தது. ஓம் பிரகாஷ் சவுதாலா 163 நாள் சிறையில் இருந்தார். பைபாஸ் செய்யப்போவதாக வெளியே இப்போது வந்துள்ளார். இரும்பு தாது சுரங்க ஊழல் வழக்கில் ஜனார்த்தன் ரெட்டி கர்நாடக மாநில சிறையில் இன்னமும் உள்ளார். ஜெயலலிதா உள்ள சிறையில் உள்ளார். எடியூரப்பா 21 நாள் இருந்தார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி 487 நாள்கள் இருந்தார். அதற்கு பிறகுதான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
வழக்குகள் புதிதல்ல
ஜெயலலிதாவுக்கு இது ஒரு வழக்குதானா. புதிதா என்றால், 13 வழக்குகள் போடப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை. 100 கோடி ரூபாய் அபராதம். நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு. ஆதாரம் இல்லாததால் விடுதலை. டான்சி வழக்கு. 3 ஆண்டுகள் சிறை, மேல்முறையீட்டில் விடுதலை. பிரசன்ட்ஸ்டே வழக்கு, ஓராண்டு சிறை மேல்முறையீட்டில் விடுதலை. கிரானைட் குவாரி வழக்கு விசாரணையின்போதே கைவிடப்பட்டது. வண்ணத்தொலைக்காட்சி பெட்டி ஊழல் வழக்கு. அந்த வழக்கில் விடுதலை. பிறந்தநாள் பரிசு வழக்கு. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
தவறான செய்தி
வருமான வரி தாக்கல் செய்யாத வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத் திராட்சை தோட்ட வழக்கு விசாரணையின்போதே கைவிடப்பட்டது. தெற்காசிய விளையாட்டுபோட்டி விளம்பர வழக்கு விசாரணையின்போதே கைவிடப்பட்டது. ஸ்பிக் பங்கு வழக்கு விசாரணையின்போதே கைவிடப்பட்டது. வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற வழக்கு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இப்படி 13 வழக்குகள் உள்ளன. தமிழ்நாட்டு மக்களுக்கு தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. நிறைய பேருக்கு இது தெரியாது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறினார்.