தமிழர்கள், பெங்காலிகளை விட மலையாளிகள் ரொம்ப "ஒஸ்தி"யாம்.. இதுவும் கட்ஜுதான்!
சென்னை: அடங்க மாட்டேன் என்கிறார் மார்க்கண்டேய கட்ஜு. தமிழர்கள் இந்தி கற்பதில்லை, கற்காவிட்டால் வெளியில் போனால் கஷ்டம் என்றும், திருக்குறளில் சமஸ்கிருதம் கலந்திருப்பதால் அதை தடை செய்ய முடியுமா என்றும் கேட்டு பேஸ்புக்கில் பதிவு போட்ட அவர் தற்போது தமிழர்கள், பெங்காலிகளை விட மலையாளிகளே ஒசத்தி என்று புதிய பதிவைப் போட்டு தமிழர்களையும், பெங்காலிகளையும் மனம் நோகச் செய்துள்ளார்.
மலையாளிகளை சமீப காலமாக அவர் ரொம்பவே உசத்திப் பேசி வருகிறார். அதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது. அது அவரவர் இஷ்டம். ஆனால் மற்ற இரு தேசிய இனக்குழுக்களை மலையாளிகளுடன் ஒப்பிட்டு மலையாளிகளை உசத்தியும், மற்ற இரு தேசிய இனக்குழுக்களையும் மட்டம் தட்டியும் அவர் பேசியிருப்பதுதான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது தொடர்பான கருத்துக்கள் குறித்து கட்ஜு கவலையே படவில்லை.
தமிழர்கள் இந்தி கற்க வேண்டும் என்பது குறித்தும், திருக்குறள் குறித்தும் அவர் போட்ட பதிவுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்தும், விளக்கம் அளித்தும் கட்ஜுவுக்குப் பதிலளித்து வருகின்றனர். இதை விரும்பாமல்தான் தற்போது மலையாளிகளை விட தமிழர்கள் கேவலமானவர்கள் என்பது போல கட்ஜு புதிதாக போட்டுள்ளார். அந்தப் பதிவின் விவரம்:

இந்தியர்கள் அனைவரும் சமம்தான்
இந்திய மக்கள் அனைவரையும் நான் சமமாகவே பார்க்கிறேன், மதிக்கிறேன். இந்தியா போன்ற நாட்டுக்கு இதுபோன்ற எண்ணம் மிகவும் அவசியமாகும். அனைவரும் ஒரே நாடாக இருக்க இது அவசியமும் கூட. நமது நாடு பலவிதமான கலவைகளுடன் கூடியது, வேறுபாடுகளைக் கண்டது. அதிலும் நாம் ஒற்றுமயாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமானது.

ஆனால் மலையாளிகள் பெரியவர்கள்
ஆனால் தமிழர்கள், பெங்காலிகளுடன் ஒப்பிடுகையில் மலையாளிகள் உசத்தியானவர்கள். உயர்ந்தவர்கள். தமிழர்களுக்கும், பெங்காலிகளுக்கும் தங்களது இனம்தான் பெரியது என்ற ஆணவம் அதிகம். ஆனால் கேரளத்தவர்களிடம் அது இல்லை.

நான் இப்ப என்ன சொல்லிட்டேன்
உதாரணத்திற்கு, தமிழர்கள் இந்தி கற்றால் நல்லது என்று நான் எனது முந்தைய பதவில் ஆலோசனை கூறியிருந்தேன். அதற்கான காரணங்களையும் கூறியிருந்தேன். நான் கட்டாயப்படுத்தக் கூட இல்லை. அதை செய்யும் நிலையிலும் நான் இல்லை. பரிந்துரைதான் செய்திருந்தேன்.

என்னா சத்தம்!
ஆனால் பாருங்கள், நான் சாதாரணமாக கூறிய யோசனைக்கே தமிழர்கள் எத்தனை எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழ்தான் மாபெரும் மொழி என்று கத்துகிறார்கள் (நான் இல்லை என்று சொன்னேனா).. முட்டாள்தனமாக சமஸ்கிருதத்தைத் தாக்குகிறார்கள். ஆனாஸ் நான் அதை மாபெரும் மொழியாக கருதுகிறேன். அதிலும், உருது மொழியிலும்தான் இந்தியாவின் பெரும்பாலான கலாச்சாரம் அடங்கியுள்ளது. சமஸ்கிருதத்தை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் அந்த மொழியை புறக்கணிப்பது தெரிய வருகிறது.

பெங்காலிகளும் அப்படித்தான்
பெங்காலிகளும் கூட அப்படித்தான். தாங்கள்தான் மிகப் பெரிய அறிவாளிகள், மெத்தப் படித்தவர்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் அநாகரீகமானவர்கள் என்ற நினைப்பு அவர்களுக்கு உண்டு. சுபாஷ் சந்திர போஸ் குறித்து நான் விமர்சித்தபோதும் இப்படித்தான் அவர்களும் கத்தினார்கள். அவரை நான் ஜப்பானிய ஏஜென்டாகத்தான் பார்க்கிறேன். அதேபோல தாகூர் பிரிட்டிஷ் ஏஜென்ட். எனது பிளாக்குகளைப் பாருங்கள். காரணம் கூறியுள்ளேன்.

ஆனால் கேரளாக்காரர்கள் ரொம்ப நல்லவர்கள்
ஆனால் கேரளாக்காரர்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்களிடம் இந்த இன ஆணவம் எல்லாம் கிடையவே கிடையாது. அந்த எண்ணம் கூட அவர்களுக்கு கிடையாது. அவர்கள் தங்களது மொழி, கலாச்சாரத்தை உயர்த்திப் பேசி நான் பார்த்ததே இல்லை. அவர்கள்தான் உண்மையான இந்தியா, வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையாக வாழ்வது அவர்கள் மட்டுமே என்று போகிறது கட்ஜுவின் பதிவு.
தம்பி போதும் நிறுத்து, ரீலு அந்து போச்சு என்று சத்யராஜிடம் கவுண்டமணி ஒரு வசனம் பேசுவார்.. அது என்னவோ இப்ப ஞாபகத்துக்கு வருது!












Click it and Unblock the Notifications