குமரி முதல் காஞ்சி வரை ஏன் ஸ்டாலின் பயணம் போகிறார் தெரியுமா... ?
சென்னை: மக்களை சந்தித்து பேச நமக்கு நாமே பயணம் கிளம்பப் போகிறார் ஸ்டாலின். குமரியில் இருந்து காஞ்சிவரை பயணம் செய்யும் ஸ்டாலின், மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்கப் போவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.தேர்தலுக்கு தயாராகி வரும் ஸ்டாலினின் இந்த பயணத்தில் நடைபயணம், பிரச்சார கூட்டங்களும் இடம்பெறப்போகிறது. மதுரை, கடலூரில் கூடிய கூட்டத்தைப் போல தமிழகம் எங்கும் அதிமுக அரசுக்கு எதிராக கூட்டத்தை திரட்ட திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முழக்கமே மதுவிலக்கு என்றாகிவிட்டது. எனவே திமுக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக என கட்சி வாரியாக மதுவிற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மதுவிலக்கு போராட்டம் ஒருபுறம் நடக்க, அதிமுகவின் ஐவர் அணியினர் மாவட்டம்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

துண்டு பிரச்சாரம்
பாட்டாளி மக்கள் கட்சியோ மக்களை சந்தித்து அரசுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது.120 தொகுதிகளில் வீடு வீடாக துண்டு பிரச்சாரம் கொடுக்கும் பணியை துவங்கிவிட்டது பாமக.

விஜயகாந்த் பிறந்தநாள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொடங்கி மாவட்டம்தோறும் பயணம் செய்யப்போகிறார் விஜயகாந்த்.

சுறுசுறுப்பான திமுக
திமுகவில் கூட்டணி பற்றி முடிவான பின்னர்தான் தேர்தலுக்கான அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். ஆனால் இந்தமுறையோ தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு நியமித்தது தொடங்கி பிரச்சார பயணம் வரை சுறுசுறுப்பாக பணிகளை தொடங்கிவிட்டது.

ஸ்டாலின் பயணம்
கடந்த முறை கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் இம்முறை கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் தொடங்கி காங்கிரஸ் கட்சி வரை கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்கத் தொடங்கி இதனால் கடுப்பான ஸ்டாலினோ கூட்டணி பற்றி அப்புறம் பேசிக்கலாம் என்று பயணம் கிளம்பிவிட்டார்.

குமரி டூ காஞ்சி
ஸ்டாலினுக்கு தேர்தல் சுற்றுப்பயணம் என்றாலே கன்னியாகுமரிதான் சென்டிமெண்ட் இடமாம் எனவேதான் இம்முறையும் குமரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறாராம். 2004, 2006, 2009 தேர்தல்களில் குமரியில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது காஞ்சியில் இருந்து பயணத்தை தொடங்கினார்.

தேர்தல் வியூகம்
சட்டசபை தேர்தலில் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது திமுக. திமுகவின் மீதான ஊழல் புகார்களால் கட்சி பலவீனமாக இருக்கிறது என்று கடந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் நினைப்பதாலேயே கூட்டணியில் பங்கு கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.

தேர்தலில் தெரியும்
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் மனநிலையை அறிந்தே எங்களின் பலத்தை சட்டசபைத் தேர்தலில் தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறார் கருணாநிதி.

யாரும் கூப்பிடலையே
இது ஒருபுறம் இருக்க கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் திமுக திணறுவதாக சீமான் கூறியதைக்கேட்டு கூட்டணிக்கு வாங்க என்று யாரையும் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கலையே என்று கூறியுள்ளார் ஸ்டாலின். இந்த பதில் பாமக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பொருந்துமாம்.

தேர்தலுக்கு எத்தனை அணி?
சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் பட்சத்தில், திமுக தலைமையில் ஒரு அணியும், பாமக தலைமையை ஏற்கும் ஒரு அணியும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. திமுக தலைமையை தேமுதிக ஏற்கும் பட்சத்தில் துணை முதல்வர் பதவி கேட்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications