கிழக்கு நோக்கி தியானம் செய்ய ஜோதிடர்கள் ஆலோசனை... ஸ்டாலின் மெரீனா விசிட் ரகசியம்
: இரவு நேரங்களில் கிழக்கு நோக்கி தியானம் செய்தால் அரச பதவி தேடி வரும் என்று ஜோதிடர்கள் ஆலோசனை கூறியதாலேயே மெரீனா கடற்கரைக்கு ஸ்டாலின் அடிக்கடி விசிட் அடிக்கிறாராம்.
சென்னை: சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் இப்போதெல்லாம் அடிக்கடி மெரீனா கடற்கரைக்கு செல்கிறார். திருவாரூர் கமலாலய குளக்கரையிலும் அமர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு ஜோதிடர்களின் ஆலோசனைதான் என்று கூறுகின்றனர்.
அதிமுகவில் சரியான தலைமையில்லை, உள்கட்சி குழப்பம் நீடிக்கிறது. அமைச்சர்கள் ஒருபக்கம் அல்லாட, எம்எல்ஏக்கள் ஒரு பக்கம் மல்லுக்கட்ட இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் நிலையோ படு திண்டாட்டமாக இருக்கிறது.
வலுவான எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினோ, தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது என்று அறிக்கை மட்டுமே விடுகிறார். லேட்டஸ்டாக இப்போது அடிக்கடி மெரீனா கடற்கரையில் ஆலோசனை நடத்துகிறார்.
இதன் பின்னணியில் ஜோதிடர்களின் ஆலோசனை இருக்கிறது என்கின்றனர். சூரியன் உதிக்கும் திசை நோக்கி தியானம் இருக்க வேண்டும் என்றும் சிவ பூஜை செய்ய வேண்டும் என்றும் ஜோதிடர்கள் கூறியதாலேயே அவர் மெரீனா கடற்கரைக்கு வந்து ஆலோசனை செய்வதாக கூறுகின்றனர்.
ஆலய தரிசனம்
நமக்கு நாமே பயணம் சென்ற போது ஸ்டாலின் திருக்கோஷ்டியூர் சென்று ராமானுஜரை தரிசனம் செய்தார். அவரது மனைவி துர்கா, பல ஆலயங்களுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வருகிறார்.
திருவாரூர் கமலாலயம்
கடந்த வாரம் திருவாரூர் சென்ற ஸ்டாலின் தியாகராஜர் கோவிலுக்குச் சென்று பூஜை செய்தாராம். கமலாலயம் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து சிறிது நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போதே இது புதுவிதமான ஆலோசனையாக இருக்கிறதே என்று நாம் எழுதியிருந்தோம். ஆனால் சிவனுக்கு பூஜைகள் செய்து விட்டு இரவு கமலாலயம் குளத்தை இடது - வலமாக சுற்றி வந்து வணங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சிவ ஆலய வழிபாடு
ஸ்டாலினின் ஆன்மீக பயணம் இதோடு நிற்கப்போவதில்லையம், பிரதோச தினங்களில் தொடர்ந்து சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஆட்சிக்கட்டிலில் முதல்வராக அமரலாம் என்பது ஜோதிடர்களின் ஆலோசனை.
மெரீனா தியானம்
ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே மெரினா கடற்கரைக்கு வரும் ஸ்டாலின் சூரியன் உதிக்கும் திசையை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறாராம். நடக்கிற கலவரத்தில் யாராவது நிலையான ஆட்சி கொடுத்தால் சரிதான் என்பது மக்களின் எண்ணமாக இருந்தாலும் ஸ்டாலினுக்கு ஆட்சிக்கட்டிலில் அமரும் யோகம் கிடைக்குமா பார்க்கலாம்.