அஞ்சலி சொல்லக் கூட ஆண்மை இல்லையா...!
முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவரின் பிறந்த நாளாகட்டும், தேர்தல் வெற்றி ஆகட்டும், சிறைக்கு போய் திரும்பினாலும் பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் வாழ்த்து விளம்பரங்கள் போட்டு திணறிடிப்பார்கள்.
தங்கத் தலைவி, புரட்சித்தலைவி, அம்மா, நிரந்தர முதல்வர் என ஆயிரம் ஆயிரம் அடைமொழிகளில் பேப்பரை நனைத்திருப்பார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா தயவில் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தான்.
இதை ஏன் இப்போது பதிவிடுகிறேன் என்றால்...
அப்பேர்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றோடு 48 மணி நேரத்தை தாண்டி விட்டது. 5ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு அவர் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது... மறுநாள் காலை என் வீட்டில் விழுந்த நாளிதழ்களை எடுத்து பார்த்தேன்.... எல்லாம் வழக்கம் போல வெளியானது. கூடுதல் பக்கங்கள் எதையும் காணோம்.
ஒருவரி அஞ்சலி விளம்பரம் கூட இல்லை... முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது அழுது கதறி கண்ணீர் விட்ட போலி வேடதாரிகள் ஒருவருக்கு கூட அதிகாரம் கொடுத்து அழகு பார்த்த முதலமைச்சருக்கு ஒரு அஞ்சலி விளம்பரம் கூட போட வேண்டும் என தோன்றவில்லை.
சரி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆளுமை மறைந்த துக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அடுத்த நாள்? காலை நாளிதழ்களிலும் அதே நிலை... மாலை நாளிதழில் என் துறையை சேர்ந்த இயக்குனர் மனோபாலா ஒரு பக்கம் விளம்பரம், ஒரு கல்லூரி துணை வேந்தர் ஒரு பக்க விளம்பரம் , நடிகர் சங்க விளம்பரம் என சில அஞ்சலி விளம்பரங்கள் மட்டுமே இடம்பிடித்திருந்தன. ஆங்கிலப் பத்திரிகைகளில் சில நிறுவனங்கள் அஞ்சலி செலுத்தியிருந்தன.
முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தால் காலியான முதல்வர் பதவியாகட்டும், அமைச்சர்கள் ஆகட்டும் இப்போது அந்த பதவிகளில் இருக்கிற யாருமே மறந்தும்கூட இனி முதலமைச்சர் ஜெயலலிதா பேரை பயன்படுத்த மாட்டார்கள் போல.
அவர் உயிரோடு இருந்த போது அரிதாரம் பூசாமலேயே சிறந்த நடிகர்களாக, நடிகையாக வலம் வந்தவர்கள் இப்போதும் அடுத்த அத்தியாயத்திற்காக நடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவின் அதிகார மையமானதும் அவரை அந்த நிலைக்கு உயர்த்திய எம்ஜிஆர் அவர்களை முன்னிலைப்படுத்தாமல் தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். அவரின் அத்தனை அசைவுகளிலும் கூடவே பயணித்தவர்கள் இப்போது அவர் செய்ததையே திரும்பச் செய்கிறார்கள்.
உயிரோடு இருந்த முதல் நாள்வரை மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா என சொல்லிவந்த ஜெயா டிவி ஜெயலலிதா என்கிறது.
செல்வி ஜெயலலிதா என சொல்லி வந்த எதிர்க்கட்சி டிவிக்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்கின்றன.
இதுதான் ஆரம்பம். இன்னும் பார்க்க வேண்டிய நிறைய இருக்கிறது...!
இந்த பதிவால் நான் அதிமுக தொண்டன் என நினைக்கவேண்டாம். நான் ஒரு பத்திரிக்கையாளன்.
- கோடங்கி