ஒரு மாதமாக தத்தளிக்கும் கடலூர்: ஒரு மாதமாக ஜெயலலிதா ஏன் எட்டிக் கூட பார்க்கவில்லை?

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டமே வெள்ள தேசமாக ஒரு மாத காலமாக மிதந்து கொண்டிருக்கிறது... ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுநாள் வரை அந்த பாவப்பட்ட கடலூர் மாவட்டத்தை எட்டிப்பார்க்காமல் இருப்பது அந்த மாவட்ட மக்களை உச்சகட்ட கோபத்துக்கு கொண்டு சென்றுள்ளது...

தீபாவளி முதல் பெய்ய தொடங்கிய பெருமழையும் பேய் வெள்ளமும் கடலூரை காணாமலடித்துக் கொண்டிருக்கிறது. சுனாமி, தானே புயல் இப்போது பருவமழை என அனைத்தும் கடலூரை காவு கொள்ள படையெடுத்துக் கொண்டே இருக்கின்றன...

ஏதேதோ மாவட்டங்களில் பெய்யும் மழையனைத்தையும் கெடிலம் ஆறாக, பரவானாறாக, தென் பெண்ணையாறாக, வெள்ளாறாக, கொள்ளிடமாக தாங்கிக் கொண்டு கடலில் கொண்டு சேர்க்கிறது கடலூர்... இத்தனை ஆறுகளின் கரையோரம் வாழும் பல்லாயிரம் மக்களோ வீடிழந்து, வாழ்விழந்து அகதிகளாகிக் கிடக்கின்றனர்..

ஒரு மாதமாகலமாக வாழ்ந்த வீடு என்னாயிற்று? கால்நடைகள் என்னாயிற்று? நாம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தோமே... அந்த கிராமம் இருக்கிறதா? சூனிய பிரதேசமாக உருமாறிப் போனதா? என எதுவும் தெரியாமல் நிவாரண முகாம்களில் தேசாந்திரிகளாக தஞ்சமடைந்து கிடக்கிறார்கள்...

இந்த கடலூர் மாவட்டமும் தமிழகத்தின் ஒரு பகுதிதான்.. இந்த கடலூரின் வரிப்பணமும் தமிழக அரசுக்குதான் போகிறது... கடலூர் மாவட்டத்தின் என்எல்சி தயாரிக்கும் மின்சாரம் இல்லாமல் போனால் தமிழகம் மட்டுமல்ல தென்னகத்தின் கதியே என்னவாகும் என தெரியாது....

கடலூரின் வீராணம் கை கொடுக்காமல் போனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் சென்னை பெருநகரம் பஞ்சத்தால் செத்து மடிந்திருக்கும்... கடலூர் முகத்துவாரங்களை பெற்றிருக்காமல் போயிருந்தால் பாய்ந்தோடும் நதிகளுக்கான மூலமான பகுதிகள் அனைத்தும் மூழ்கிப் போயிருக்கும்...

ஆனால் இந்த கடலூரை கவனிப்பாரும் இல்லை.. கேட்பாரும் இல்லை.. ஒரு மாத காலமாக 'பாவலாவுக்கு' மேற்கொள்ளப்படும் அரசு நிவாரணப் பணிகளுக்கு அப்பால் எதுவும் முழு வீச்சாக நடைபெறவில்லை... ஓடோடி வரும் தன்னார்வலர்கள்தான் கடலூரை முற்றுகையிட்டு நிவாரணப் பணி செய்து வருகின்ற்னார்...

கடலூர் இத்தனை பெருந்துயரத்தில் கதறிக் கொண்டிருக்கிறது.. பிரதமர் வந்து ஹெலிகாப்டரில் சென்னையை பார்வையிடப் போகிறார் என்ற நிலையில் சென்னை வெள்ளத்தை அதே நாளில் பிரதமர் பார்வையிடுவதற்கு சில மணி நேரம் முன்னதாக முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுகிறார். ஆனால், ஒரு எட்டு கடலூர் சேதத்தை பார்க்க மனது வரவில்லை...

கடலூரை என்ன கடலுக்கா தாரைவார்த்து கொடுத்து விட்டீர்கள்? கடலூருக்கு ஒரு வேளை பிரதமர் வந்திருந்தால் ஜெயலலிதாவும் வந்திருக்கக் கூடுமோ?. அப்படியென்ன கடலூருக்கு போவதற்கு உங்களுக்கு தடை?

Why not Jayalalithaa to visit Cuddalore?

இதோ ஒரு கடலூர் வாசியின் உள்ளக் குமுறலை பாருங்கள்...

கடலூர் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நவம்பர் 8ஆம் தேதி தொடங்கிய வெள்ளம். இதுவரை தண்ணீரில் மிதக்கின்றன பல ஊர்கள்.

ஆனால்,

பிரதமர் வந்தார் சென்னையை சுற்றிப்பார்த்தார்,

முதல்வர் வந்தார் சென்னையைப் பார்த்தார்,

தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் சென்னைக்கு அதிக கவரேஜ்,

சென்னை , திருவள்ளூர், காஞ்சி மக்களுக்கு பேருந்துகள் இலவசம்,

உணவுகளும், நிவாரணப் பொருட்களும் சென்னையில் மலையாக குவியத் தொடங்கிய பின்தான் கடலூரை நோக்கியும் வந்துகொண்டிருக்கிறது,

சென்னை மக்களில் பெரும்பாலானோருக்கு மாதச்சம்பளம், கடலூர் மாவட்ட மக்கள் அதிகம் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும்தான், இவர்களின் வாழ்வாதார நிலங்கள் இப்போது இடுப்பளவுத் தண்ணீரில்,

சென்னையில் அரசுத்துறை செயலாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நேரலையில், கடலூர் பற்றி ஒப்புக்கும் ஒருவரி விளக்கம் இல்லை,

செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு குடிநீர் கொடுத்தாலும் கடும் வெள்ளத்தையும் கொடுத்திருக்கிறது

ஆனால், கடலூர் மாவட்ட மக்கள் வீராணம் ஏரியில் குடிநீரை மட்டும் சென்னைக்கு கொடுத்துவிட்டு சேதம்தரும் வெள்ளத்தை தாங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர்.

2004 சுனாமி, 2005 வெள்ளம், 2011 தானே புயல், 2014 கடும்வறட்சி இப்போது மீண்டும் வெள்ளம் என கடலூர் மாவட்டம் சந்திக்காத பேரிடர் இல்லை.

கெடிலம், தென்பெண்ணை, கொள்ளிடம், பரவனாறு, வெள்ளாறு ஆறுகள் சுமந்துவரும் பலமாவட்ட மழைநீரை இந்த மாவட்டம்தான் கடலில் சேர்க்கிறது. அதனால், பாதிப்புகளும் தொடர்கிறது,

கடலூர் மாவட்ட மக்கள் சந்திக்காத இழப்புகள் இல்லை.

தானே புயலுக்கு இடிந்த வீடுகளை புதிதாக கட்டி இப்போது அந்த வீடுகளையும் வெள்ளத்திற்கு கொடுத்துவிட்டு வெறுந்தரையில் நிற்கின்றனர் விசூர் கிராம மக்கள்,

வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள், தரைப்பாலங்களை வெள்ளம் பதம்பார்த்து வைத்திருக்கிறது,

தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் சென்னையை சுற்றட்டும்.

கடலூர் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!...............

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+