ஓ.பன்னீர்செல்வம் பிரஸ் மீட்டால் மேலும் சந்தேகம் அதிகரிப்பு!
Recommended Video

சென்னை:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, தான் சந்தித்தது உண்மை தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இருப்பினும் இந்த செய்தியாளர் சந்திப்பு சந்தேகங்களை தீர்ப்பதற்குப் பதிலாக பல்வேறு புதிய சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.
தினகரனை, பன்னீர்செல்வம் சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றி விடவேண்டும் என்று வற்புறுத்தியதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சில தினங்கள் முன்பு அளித்த பேட்டி பெரும் புயலை கிளப்பியது.
இதையடுத்து நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன் கூட இந்த சந்திப்பு நடந்தது உண்மைதான் என்றும் இதை பன்னீர்செல்வம் மறக்கவே முடியாது என்றும் தெரிவித்தார்.

பதில் தரவில்லை
பன்னீர்செல்வம் கூட திருச்சியில் நேற்று மதியம் நிருபர்களை சந்தித்த போது இதுதொடர்பான கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. தங்கதமிழ்செல்வன் பேட்டியை முழுமையாக படித்துவிட்டு சென்னையில் பிரஸ்மீட் செய்கிறேன் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் இந்த விவகாரத்தில் பெரும் சஸ்பென்ஸ் நீடித்தது. இதற்கெல்லாம் தீர்வாக நேற்று இரவு 6.45 மணியளவில் தனது இல்லத்தில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

நண்பர் ஏற்பாடு
அந்த சந்திப்பின்போது தினகரனை தான் சந்தித்தது உண்மை தான் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ஏற்பாட்டின் பேரில் அவரது இடத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு தனக்கு நெருக்கமான ஒருவருக்கும் கூட தெரியாது என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த தகவல் என்பது மேலும் புதிதாக பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

தர்மயுத்தம்
ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து சசிகலா விலகுமாறு வற்புறுத்திய நிலையில், ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்ம யுத்தம் என்ற பெயரில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார் பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதுதான் அவரது முக்கியமான கோரிக்கை. இந்த கோரிக்கை என்பது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் எடப்பாடி அணிக்கே தெரியாமல் தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஒரே அணிதானே
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைத்து விடுவேன் என்று தினகரன் கூறி வந்ததாகவும், எனவே நல்ல வார்த்தை கூறுவார் என்று நினைத்து தினகரனை அப்போது சந்தித்ததாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் இருவரும் அப்போது ஒரே அணியில் இருந்தவர்கள். இவர்தான் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் நடுவே இவர் ஏன் தினகரனை சந்தித்தார் என்பதற்கு, பன்னீர் செல்வம் அளித்த பதில் போதுமானதாக இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆதரவாளர்களுக்கு தெரியாதாம்
மேலும் பன்னீர்செல்வத்திற்காக அத்தனை கெடுபிடிகளையும் தாண்டியும் கூட ஆதரவாளர்கள் பலரும் அணிவகுத்து வந்தனர். ஆனால் யாருக்குமே தெரியாமல் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டு, இவர் தினகரனை சந்தித்திருப்பது என்பது அவரது ஆதரவாளர்களுக்கும் இப்பொழுது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆதரவாளர்களுக்கு சொல்லிவிட்டே தினகரனை சந்தித்திருக்கலாமே, ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications