'நீட்'க்கு முதலில் எதிர்ப்பு.. இப்போது எதற்காக ஆதரவு.. அரசு ஆட்டம் காண்பதாலா? ஐகோர்ட் சரமாரி கேள்வி
‘நீட்’ தேர்வுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தற்போது எதற்காக ஆதரவு தெரிவித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: 'நீட்' தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே நடைபெற வேண்டும் என்று வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் குழு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆதரவு எதற்கு?
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞரிடம் நீதிபதிகள், ‘நீட்' தேர்வுக்கு முதலில் எதிர்ப்பை தெரிவித்த தமிழக அரசு தற்போது எப்படி ஆதரவு அளிக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.
அரசு ஆட்டம்
மாநில அரசு ஆட்டம் கண்டுள்ளதால் இப்படி மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்கிறதா என்றும் ‘நீட்' தேர்வு மதிப்பெண்தான் சேர்க்கைக்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கபடுவதற்கான காரணம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதுதொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் என்ன சொல்கிறது என்றும் நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
நடவடிக்கை என்ன?
‘நீட்' தேர்வு ரத்து தொடர்பான சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியது. சட்டத்திற்கு ஒப்புதல் பெற இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
உத்தரவு
இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் நாளை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.