சர்ச்சை... ஒரு போஸ்டருக்காக பொங்கல் நிகழ்ச்சியை புறக்கணித்தார் தவில் வலையபட்டி சுப்பிரமணியம்?
சென்னை: பறை இசைக் கலைஞர் புகைப்படத்துக்கு அருகே தம் படத்தை அச்சிட்டதால் ஒப்புக் கொண்ட பொங்கல் விழாவை தவில் கலைஞர் வலையபட்டி சுப்பிரமணியம் ரத்து செய்ததாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படி இசையிலும் சாதீய அவமானம் நுழைந்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் வரும் வெள்ளியன்று பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவுக்கான சுவரொட்டியின் ஒருபுறத்தில் பறையாட்ட கலைஞர் பறையை இசைப்பது போலவும் மறுபுறத்தில் தவில் கலைஞர் வலையபட்டி சுப்பிரமணியம் தவில் இசைப்பது போலவும் படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் பறை இசைக் கலைஞருடன் தமது புகைப்படத்தை சேர்த்து பதிவிட்டதால் தாம் நிகழ்ச்சிக்கு வர முடியாது என கூறியுள்ளார் வலையபட்டி சுப்பிரமணியம். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவில் வலையபட்டி சுப்பிரமணியம் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
பறை அடிப்பவரோடு சேர்த்து விளம்பரம் செய்ததால் இந்த நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டாராம் வலையப்பட்டி.
உலகப் புகழ்பெற்ற தன்னை ஒரு நாட்டுப்புறக் கலைஞரோடு இணையாக வைத்ததை அவர் மனம் ஏற்றுக்கொள்ள தயங்கியிருக்கலாம் .

இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பறையாட்ட கலைஞர்கள் பெயருக்கு அருகே தன் பெயரை அச்சிட்டதற்காக, தவில் கலைஞர் வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் பொங்கல் விழாவை ரத்து செய்துள்ளதாக செய்தி அறிந்தேன்.
மானுடத்தை பேதப்படுத்தும் சாதிய அவமானம், இசையிலும் புகுந்துகொண்டிருப்பது வேதனையைத் தருகிறது. சாதீயத்தின் விஷக் கொடுக்குகளில் இருந்து பண்பாட்டு வாழ்வியலை மீட்பதற்கான அவசியத்தை பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்திவிட்டன.

இசைக்கலைஞர் T.M. Krishna 'A Southern Music - The Karnatik Story' என்று ஒரு புத்தகமே எழுதி மூன்றாண்டுகள் ஆகின்றன. சாதீயத்துக்கு ஒவ்வொரு கலைஞனும் உரக்கப் பேசவேண்டிய தருணம் இது.
இவ்வாறு ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications