வைகோவிடம் இருந்து திருமா, முத்தரசன், ராமகிருஷ்ணனுக்கு "விடுதலை"
வைகோவின் தன்னிச்சையான முடிவுகளாலே மக்கள் நல கூட்டணி உடைந்தது. இனியேனும் திருமா, முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் சுதந்திரமான முடிவுகளை எடுப்பார்கள்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி உடைய நான் காரணமாக இருக்க மாட்டேன் என சொன்னவர் மதிமுக பொதுச்செயலர் வைகோதான்... இன்று மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாகவும் அறிவித்தவரும் வைகோதான். வைகோவின் தன்னிச்சையான முடிவுகளால் தத்தளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் முத்தரசன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் இப்போது விடுதலை பெற்றவர்களாக நிம்மதி அடைந்திருப்பார்கள்.
சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு மக்கள் நலக் கூட்டணி ஆட்டம் காரண தொடங்கியது. திருமாவளவன் திமுக அணிக்கு தாவ முயற்சித்தார். இடதுசாரிகளும் கூட திமுகவுக்கு நேசம் கர நீட்ட முயற்சித்தன.
காவிரி பிரச்சனை தொடர்பான திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல்கள், ரூபாய் நோட்டு தட்டுப்பாடு விவகாரம் இவற்றில்தான் மக்கள் நலக் கூட்டணி உடைவது உறுதியானது.

காவிரி, 3 தொகுதி தேர்தல்
டெல்லியில் காவிரி பிரச்சனை தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது காவிரி மற்றும் 3 தொகுதி தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திருமா விருப்பம்
காவிரி பிரச்சனையில் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் விரும்பியது; 3 தொகுதி தேர்தல்களில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. இந்த விவகாரங்களில் தங்களது கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என திருமாவளவனும் ஜி. ராமகிருஷ்ணனும் அறிவித்தனர்.

வைகோ மீது புகார்
ஆனால் திடீரென வைகோ, திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என அறிவித்தார். அதேபோல் 3 தொகுதிகளில் போட்டியிடவும் மாட்டோம் என்றார். இதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை நடத்தியது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்த இரு பிரச்சனைகளிலும் வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என வெளிப்படையாகவே குற்றம்சாட்டப்பட்டது.

அதிருப்தி தொடர்கதை..
இருந்தபோதும் வேறுவழியில்லாமல் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் போகவில்லை. அதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியும் 3 தொகுதிகளில் போட்டியிடவில்லை. இதன் பின்னர் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை முற்று முழுதாக வைகோ ஆதரித்தார். ஆனால் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன.

அதிமுக ஆதரவு- புதுவை மாநாடு
இதேபோல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை முழுமையாக ஆதரித்து பேசி வருகிறார் வைகோ. இதனிடையே புதுச்சேரியில் ரூபாய் நோட்டுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் மாநாட்டை நாளை நடத்துவதாக அறிவித்தது. இம்மாநாட்டுக்கு வைகோ அழைக்கப்படவில்லை.

இனி விடுதலைதான்
புதுச்சேரி மாநாடு நாளை நடைபெறும் நிலையில் தம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக வைகோ அறிவித்திருக்கிறார். வைகோவின் இந்த அறிவிப்பால் இனி விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் சுதந்திரமாக செயல்பட்டு முடிவெடுப்பார்கள் என்பது அக்கட்சிகளின் தொண்டர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications