என் புருஷன் கொலைகாரனா.. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தனது கணவர் இரட்டைக் கொலைகளைச் செய்தவர் என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது ஆசிரியை மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை சேர்ந்தவர் உஷா. இவர் கடந்த ஜீலை மாதம் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்ட 30வது நாள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சித்தேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அரக்கோணத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த அவரது மகள் தமிழ்செல்வியை சோளிங்கர் அடுத்த பாராஞ்சி என்ற இடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இரண்டு வழக்குகளையும் இரு ஊர் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சித்தேரியைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் இருவரையும் கொன்றது தெரிய வந்தது. இந்த நிலையில் சுரேஷ் பாபுவின் மனைவி கலைவாணிக்கு இது தெரிய வந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஆசிரியை ஆவார்.
தனது கணவர் கொலைகாரர், அதுவும் இரட்டைக் கொலைகளைச் செய்தவர், அதுவும் பெண்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தவர் என்று அறிந்ததும் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து நேற்று தனது வீட்டில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.