கணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் சகோதரியுடன் சேர்ந்து தற்கொலை – கன்னியாகுமரி பரிதாபம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கீழ மாவிளையில் கணவன் இறந்த துக்கத்தில் சகோதரியுடன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாக்கமங்கலம் கீழ மாவிளையை சேர்ந்தவர் தங்கநாடார். இவர் போக்குவரத்து கழகத்தில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தங்க புஷ்பம்.
இவர்களது ஒரே மகன் நவநீதகிருஷ்ணன். எஞ்சினியரான இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தனியாக வசித்து வந்த தம்பதி:
இதனால் இங்கு தங்கநாடாரும், தங்கபுஷ்பமும் தனியாக இருந்தனர். தங்க புஷ்பத்தின் அக்காள் சரஸ்வதியும் இவர்களுடன் வசித்து வந்தார்.
உடநலக்குறைவால் அவதி:
கடந்த சில நாட்களாக தங்க நாடார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் நவநீதகிருஷ்ணன் அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து பெற்றோரை பார்த்து சென்றுள்ளார்.
கதறி அழுத சகோதரிகள்:
இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த தங்க நாடார் திடீரென இறந்து விட்டார். இதைப்பார்த்த மனைவி தங்கபுஷ்பம் மற்றும் அவரது சகோதரி சரஸ்வதி ஆகியோர் கதறி அழுதனர்.
இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு:
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நவநீதகிருஷ்ணன் தந்தையின் இறுதிசடங்குகளை செய்ய நான் ஊருக்கு வந்து விடுவேன் என கூறினார். இதைத்தொடர்ந்து, இறுதிச் சடங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர்.
ஸ்டோர் ரூமில் தற்கொலை:
இந்தநிலையில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தங்கபுஷ்பமும், அவரது சகோதரி சரஸ்வதியும் வீட்டின் ஸ்டோர் ரூமிக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். வெகுநேரமாகியும் அவர்கள் கதவை திறக்காததால் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தூக்கில் தொங்கிய சகோதரிகள்:
அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது அறைக்குள் தங்க புஷ்பம், சரஸ்வதி ஆகியோர் இரும்பு வளையத்தில் சேலையில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
போலீசார் விசாரணை:
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் உடல்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.