கள்ளக்காதலுக்காக கட்டிய கணவனும், பெற்ற குழந்தையும் கொலை- கள்ளக்காதலர்கள் கைது!
திண்டிவனம்: திண்டிவனத்தில் முறைதவறிய காதலுக்காக கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரையும், மகனையும் கொலை செய்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள தீவனூரை சேர்ந்தவர் சிவா ஒரு பூ வியாபாரி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் 2009 ஆம் ஆண்டு மீனாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தாமரைச் செல்வன், பாலசூர்யா ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
சித்தப்பா மகனால் விபரீதம்:
சிவாவின் சித்தப்பா மகன் சுரேஷ். இவர் சிவா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது மீனாட்சிக்கும், சுரேசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது சிவாவுக்கு தெரியவந்தது. இதனால் சிவா தனது மனைவியை கண்டித்தார்.
சிவாவைக் கொல்ல திட்டம்:
இதையடுத்து சிவாவை தீர்த்து கட்ட வேண்டும் என்று மீனாட்சியும், சுரேசும் முடிவு செய்தனர். சுரேஷ் தனது நண்பர்கள் மணிகண்டன், பரசுராமன் ஆகியோருடன் சேர்ந்து சிவாவை கொல்வதற்கு திட்டம் தீட்டினார்.
மினிவேனால் மோதல்:
கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி அன்று ஆசூர் அருகே சிவா மோட்டார் சைக்கிளில் சென்றார் சிவா. அப்போது சுரேஷ், மணிகண்டன், பரசுராமன் ஆகிய 3 பேரும் மினிவேனை ஓட்டி சென்று சிவா மீது மோதினார்கள்.
உயிரிழந்த சிவா:
இதில் படுகாயமடைந்த அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழந்தார். போலீசார் இதை விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
காதலர்கள் தனிக்குடித்தனம்:
சிவா இறந்த ஒரு மாதம் கழித்து சுரேசும், மீனாட்சியும் ஊரை விட்டு வெளியேறி கோலியனூருக்கு சென்றனர். அங்கு இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். மீனாட்சி தனது 2 குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்றிருந்தார்.
குழந்தையும் உயிரிழப்பு:
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி மீனாட்சியின் 2 ஆவது மகன் பாலசூர்யா வீட்டில் அழுது கொண்டிருந்தான். அவனை சுரேஷ் அடித்து தள்ளினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலசூர்யா ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையும் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்தனர்.
சந்தோஷமான காதல் ஜோடி:
கணவன், மகன் என 2 கொலைகள் நடந்தும் அதை போலீசார் விபத்து என கருதியதால் கள்ளக்காதல் ஜோடி சந்தோஷமாக இருந்து வந்தனர்.
மற்ற குழந்தைகளையும் கொடுமை:
இந்த நிலையில் மூத்தமகன் தாமரைச்செல்வனையும், மீனாட்சியும் சுரேசும் கொடுமைபடுத்தி வந்தனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்காதலர்கள் கைது:
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சிவா மற்றும் பாலசூர்யா இருவரும் கொலை செய்யப்பட்ட விஷயம் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர் சிறையில் அடைத்துள்ளனர்.