”ஹனிமூன்” சென்ற பெண் கொடைக்கானலில் மாயம் - காதலனுடன் ஓட்டம் என கணவன் புகார்!
கொடைக்கானல்: கொடைக்கானலில் தேனிலவுக்குச் சென்ற இளம் பெண் திடீரென்று மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த நேமிசந்த் என்பவருடைய மகன் விக்னேஷ். இவர் கொடைக்கானல் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், "எனக்கும், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜ்மல் என்பவருடைய மகள் வர்ஷாவுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களாக நாங்கள் குடும்பம் நடத்திவந்தோம். சில நாட்களுக்கு முன்பு தேனிலவுக்காக வெளியூர் போகலாம் என்று வர்ஷா கேட்டார்.
அப்போது நான் ஊட்டிக்கு போகலாம் என்றேன், வர்ஷா கொடைக்கானல் போகலாம் என்றார். அதை ஏற்று கடந்த 25 ஆம் தேதி கொடைக்கானலுக்கு வந்தோம். இங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி 3 நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தோம்.
27 ஆம் தேதி இரவு வர்ஷா என்னிடம் நான் திருமணத்துக்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து வந்தேன் என்றும், என்னை அவருடன் அனுப்பிவிடுங்கள் என்றும் கேட்டார். அதை நான் ஏற்காமல் வர்ஷாவுக்கு அறிவுரை வழங்கினேன்.
மறுநாள் அதிகாலையில் நான் அயர்ந்து தூங்கியபோது வர்ஷா எழுந்து சென்றுவிட்டார். காலை 7.30 மணிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எனது காதலனுடன் சென்றுவிட்டேன். என்னுடைய பெற்றோருக்கும் இதை தெரிவித்துவிடவும் என்று கூறிவிட்டு செல்போனை அணைத்துவிட்டார். நான் சென்னை சென்று பல்வேறு இடங்களில் வர்ஷாவை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இது கடத்தலா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications